ஓடிப்போகும் பெண்களை அடித்து திருத்த நினைப்பது சரியா?

இன்றைய கால கட்டத்தில் ஓடிப்போகும் பெண்கள் பலரை நாம் காண முடிகிறது.
இப்படி அவர்கள் ஓடிப்போவதற்கு அவர்கள் மாத்திரம் காரணம் அல்ல.

ஒரு ஆணும், பெண்ணும் ஓடிப்போய் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்றால் அதற்குப் பின்னணியாக அவர்களுடைய வளர்ப்புடன் தொடர்புடையவர்கள் தான் பொருப்பாக இருக்கிறார்கள்.

அதாவது பிள்ளை வளர்ப்பில் பெற்றோர் விட்ட குறைதான் ஓடிப்போகும் அளவுக்கு அவர்களுக்கு தைரியத்தைக் கொடுக்கிறது.
எனது பிள்ளையைப் பற்றி எனக்குத் தெரியும்!
என் பேச்சை அவள் தட்டவே மாட்டாள்!
நான் கிழித்த கோட்டை தான்ட மாட்டாள்!
இப்படியெல்லாம் பேசும் பெற்றோர் ஒரு விஷயத்தை மட்டும் மனதில் பதித்துக் கொள்ள வேண்டும். "உங்கள் பிள்ளைகளும் பெண்கள் தான்" என்பதை.
பெண்களை பொருத்தவரை அவர்கள் ஒரு கொடியைப் போன்றவர்கள் எங்காவது படர்ந்து கொள்ள ஒரு இடம் கிடைக்கிறதா என்று எண்ணுபவர்கள். ஒரு இடம் கிடைத்தால் அதுவே அவர்களுக்கு ஆறுதலான விஷயமாக மாறிவிடும்.

அதன் பின் தாய் சொன்னாலும் விளங்காது, தந்தை சொன்னாலும் விளங்காது.
அது மட்டுமன்றி இது போன்ற தகாத ஆண், பெண் உறவு முறைகள் உருவாகுவதற்கு காரணமாக பல செயல்பாட்டை குறிப்பிடலாம். செல்போன் பாவனை, ஆண், பெண் கலப்புப் பள்ளிகள், தகாத உறவு முறைகள் என்று பலதையும் நாம் குறிப்பிடலாம்.

பிள்ளைக்கு எவ்வளவுதான் தேவை இருந்தாலும் செல்போனைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.
 பெண்கள் கல்லூரிகளில் மட்டும் சேர்ப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.
உங்கள் உண்மையான உறவினர்கள் யார் என்பதை சரியாக அடையாளம் கண்டு அவர்களுடன் மாத்திரம் இஸ்லாம் அனுமதித்த விதத்தில் உறவாட அனுமதியுங்கள். இப்படி நடந்தால் மாத்திரமே இந்த தீய செயலை நாம் தடுக்க முடியும்.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَيْهَا مَلَائِكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَّا يَعْصُونَ اللَّهَ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ
முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும்; அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர்; அல்லாஹ் அவர்களை ஏவிய எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள்; தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள்.(அல்குர்ஆன் 66:6)

நம்மையும், நமது குடும்பத்தினரையும் நரகத்தை விட்டும் நாம் பாதுகாத்துக் கொள்ளும்படி அல்லாஹ் மிகத் தெளிவாக குறிப்பிடுகிறான்.
நமது பிள்ளைகள் மாற்று மதத்தவருடனோ அல்லது நமது முஸ்லீம் ஆண்களுனோ யாருடனும் ஓடிப்போகாமல் நாம் நம் பிள்ளைகளை சரியான முறையில் வளர்க்க வேண்டும்.

ஒரு பிள்ளை தவறு செய்தால் அந்தப் பிள்ளையை திருத்துவதற்குறிய அனைத்து அதிகாரமும் பெற்றோருக்கு உள்ளது. அவர்களை கண்டித்துத் திருத்துவதில் எந்தத் தவறும் இல்லை.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை பற்றி நீங்கள் விசாரிக்கப் படுவீர்கள். மக்கள் மீது ஆட்சி புரியும் தலைவர் அவர்களுக்குப் பொறுப்பாளியாவார். அவர்களை (ஆட்சி புரிந்த விதம்) குறித்து அவர் விசாரிக்கப்படுவார். ஆண், தன் வீட்டாருக்குப் பொறுப்பாளியாவான். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவன் விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டிற்கும் அவனது குழந்தைக்கும் பொறுப்பாளியாவாள். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். அடிமை, தன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அதை (பாதுகாத்த விதம்) குறித்து விசாரிக்கப்படுவான். ஆக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புக் குட்பட்டவை குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். புகாரி (2554)
மறுமை நாளில் பெற்றோரின் பொருப்புக்ள பற்றி விசாரிக்கப்படும் போது தன் பிள்ளைகள் பற்றிய விசாரனையும் முக்கியமானதாகும்.அப்படி இருக்கும் போது நாம் நமது பிள்ளைகளை திருத்துவதில் எந்த்த் தவறும் இல்லை.
தவறைச் செய்யாதீர்கள்... பெண்களே!
சமுதாயத்தைப் பொறுத்தவரை எந்த தவறையும் ஆண்கள் செய்யலாம்(?). ஆனால் பெண்கள் செய்யக் கூடாது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ள ஒரு விதி. ஆனால் இதை பெண் அடிமைத்தனம் என்று எடுத்துக் கொள்வதை விட, ஆண் செய்யும் தவறால் சமுதாயத்தில் எந்த பெரும் சிக்கலும் உருவாகாமல் போய்விடுகிறது . ஆனால் அதே தவறை பெண் செய்யும் போது பலபிரச்சனைகள் எழும்.
உதாரணமாக, ஒரு ஆண் திருமணத்திற்கு முன்பு உடலுறவில் ஈடுபடலாம்(?) இதை இந்த சமுதாயம் பெரிதாக எடுத்துகொள்வது இல்லை . இதனால் தவறு இளைத்தவனுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. ஆனால் ஒரு பெண் திருமணத்திற்கு முன்பு உடலுறவில் ஈடுபடுவதால் கர்ப்பமுற நேரிடும். இதனால் அவளும் அவளது குடும்பமும் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம்
இதேப்போல, திருமணத்திற்குப் பிறகு ஆண் வேறு ஒரு பெண்ணுடன் வாழ்ந்தாலும் சமுதாயத்தில் இரண்டாம் தாரம் என்று பெயர் வைத்து விடுவார்கள். ஆனால் இதே ஒரு பெண் வேறு ஆணுடன் தொடர்பு வைத்துகொண்டால் அது அந்த பெண்ணின் குடும்பத்தையே சீர்குலைத்து விடும்.
ஒரு ஆண் பிடித்த பெண்ணை பெற்றோருக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொள்ளலாம்(?). அதற்கு அவன் காதலிச்ச பொண்ணைக் கட்டிக்கிட்டான் என்று சமுதாயத்தில் சொல்வார்கள். ஆனால், ஒரு பெண் இதைச் செய்தால் அவள் ஓடிப் போய்விட்டாள் என்று கூறுவார்கள்.
இது போல ஒரு குடும்பத்தில் வாழும் பெண், தான் காதலிக்கும் ஆணை நம்பி வீட்டை விட்டு வெளியேறுவதால், அவள் வாழ்க்கை மட்டும் பாதிக்கப்படுவதில்லை, அந்த பெண்ணின் குடும்பத்தாரும் பல வழிகளில் பாதிக்கப்படுகிறார்கள்.
பெண் வீட்டை விட்டு ஓடுவதால் ஏற்படும் துக்கத்தை விட, அதனால் ஏற்படும் அவமானமே அவர்களை நிலைகுலையச் செய்துவிடும். உற்றார், உறவினர்களுக்கும், அண்டை வீட்டாருக்கும், பெண் எங்கே என்று கேட்கும் கேள்விக்கு சொல்வதறியாது கலங்கும் பெற்றோரின் நிலையை காணும் பொழுது மிகவும் பரிதாபத்துக்குரியதாக இருக்கிறது .

பெற்றோர்கள் இந்த அவமானத்தை தாங்க இயலாமல் மனநிலை பாதித்து மருத்துவமனை வரை செல்வதுண்டு. சிலர் ஊரை காலி செய்து கொண்டு சென்றுவிடுவதும். தந்தை இருக்கும் வேலையை விட்டு விட்டு வேறு ஒரு இடத்தில் வேலைக்குச் செல்வதும் உண்டு.

உங்கள் பெண் எங்கே என்று கேட்பவர்களுக்கு எந்த பெற்றோரால், என் மகள் காதலித்தவனை திருமணம் செய்து கொண்டாள் என்று சொல்ல முடியுமா? கூனிக் குருகி அவர்கள் நிற்பதைக் கண்டு கேள்வி கேட்டவர்களே புரிந்து கொண்டால்தான் உண்டு.
இந்த நிலையில், வீட்டை விட்டு செல்லும் பெண்ணிற்கு திருமணமாகாத சகோதரிகள் இருப்பின் இவர்களின் எதிர்காலமும் பாதிக்கபடுவது நிச்சயம்,இதனால் அவர்களது வாழ்க்கை இன்னும் மோசமாகிறது. திருமணத்திற்காக வரன் தேடும் போது கேட்கும் முதல் கேள்வி அவர்களது குடும்பத்தைப் பற்றியதுதான். அதில் இப்படி ஒரு சிக்கல் இருப்பின், மாப்பிள்ளை வீட்டார் சற்று தயக்கம் காட்டத்தான் செய்வார்கள். அக்காள் இப்படி என்றால் தங்கை எப்படி இருப்பாளோ என்று வாய்விட்டு பேசுபவர்களும் உண்டு.

சமுதாயத்தின் ஆணி வேரே நீங்கள் தான் ( பெண்தான்). இதனால்தான் ஆணி வேர் எந்த வகையில் பாதித்தாலும் அதனால் பாதிக்கப்படுவது முழு மரமும்தான் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் நீங்கள் செய்யும் இந்த தவறால் இன்று உங்கள் குடும்பம் என்ன என்ன பிரச்சனைகளை சந்தித்து கொண்டுள்ளார்கள் என்பதை தயவு செய்து சிந்தித்து செயல் பட வேண்டும் .
இஸ்லாம் நமக்கு காட்டித்தந்த வழிமுறை படி வாழ்ந்தால் வழிதவறேல் இருக்காது !


நன்றி :அப்துல்வகாப்