ஈத் முபாரக் - பெருநாள் வாழ்த்துகள்


அன்புள்ள நண்பர்களே!! ரமலான் மாதத்தில் முப்பது நாளும் இறைவனுக்காக பகல் முழுவதும் நோன்பிருந்த அனைவரும் ஷவ்வால் மாதத்தின் முதல்நாளை ரமலான் பண்டிகையாக‌ கொண்டாடுகின்றனர். இங்கு   பஹ்ரைன்  நாளை ரமலான் பண்டிகை என்று அறிவித்திருக்கிறார்கள்.
அதிகாலையில் எழுந்து குளித்து புத்தாடை அணிந்து பள்ளிக்கு சென்று இறைவனை வணங்குதல் ரமலானின் சிறப்புகள். நோன்பிருந்தவர்கள் அனைவரும் ஏழை எளியவருக்கு பித்ரா என்னும் தானதர்மங்களை வழங்கி மகிழ்ச்சியுறுங்கள்..

உங்களது ஜகாத் என்னும் தர்மத்தை முறைப்படி ஏழை எளியவர்களுக்கு வ‌ழங்குங்கள்..

இந்த பெருநாளை நாம் சந்தோசமாக கொண்டாட இறைவன் அருள் பாலிப்பானாக..

எல்லோரும் சந்தோசமாக கொண்டாட என்னுடைய வாழ்த்துகள்..


நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய இனிய ஈத் முபாரக்.. பெருநாள் வாழ்த்துகள்..

ஈகை பெருநாள் சுன்னத்துக்கள்

நோன்பு பெருநாள் தினத்தில் எதையேனும் உண்ணாமல் நபி(ஸல்) அவர்கள் தொழும் திடலுக்கு புறப்பட மாட்டார்கள். அறிவிப்பாளர் புரைதா (ரலி) நூல்கள்: திர்மிதி, தாரகுத்னீ.

நபி(ஸல்) அவர்கள் நோன்பு பெருநாள் தொழுகைக்கு செல்லுமுன் ஒற்றைப்படையாக பேரீத்தப்பழத்தை உண்ணுவார்கள். அறிவிப்பாளர் அனஸ் (ரலி) நூல்கள்: புகாரி, அஹ்மத்.

தொழுகைக்கு செல்வதற்கும் திரும்பி வருவதற்கும் வெவ்வேறான வழியை நபி(ஸல்) அவர்கள் ஏற்படுத்திக் கொண்டார்கள். அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) நூல்: அபூதாவூத்.

நபி(ஸல்) அவர்கள் இரு பெருநாள் தொழுகைகளை (பள்ளியில் தொழாமல்) முஸல்லா எனும் மைதானத்திற்கு சென்று தொழுவார்கள். அறிவிப்பாளர் அபூ ஸயீத் அல் குத்ரி (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்.

நபி(ஸல்) அவர்கள் இரண்டு பெருநாள் தொழுகைகளையும் பள்ளியில் தொழாமல் திடலுக்கு செல்பவர்களாக இருந்தார்கள். (அன்றைய தினம்) முதலில் தொழுகையைத் துவங்குவார்கள். அறிவிப்பாளர் அபூஸயீத் (ரலி) நூல்: புகாரி.

இரு பெருநாள் தொழுகைகளை நபி(ஸல்) அவர்களுடன் பல முறை தொழுதிருக்கிறேன் அவற்றில் பாங்கும் இகாமத்தும் சொல்லப்பட்டதில்லை. அறிவிப்பாளர் ஜாபிர் பின் சமூரா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி.

நபி(ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையை தொழுதால் அதற்கு முன்னும் பின்னும் எந்தத் தொழுகையையும் தொழ மாட்டார்கள். அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி.

நபி (ஸல்) அவர்கள் (பெருநாள் தொழுகையில்) முதல் ரக்அத்தில் ஓத துவங்குவதற்கு முன் 7 தக்பீர்களும் இரண்டாம் ரக்அத்தில் ஓத துவங்குவதற்கு முன் 5 தக்பீர்களும் கூறுவார்கள். அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: அபூதாவூத்.

நபி (ஸல்) ஏழு - ஐந்து என்று பெருநாள் தொழுகையின் இரண்டு ரக்அத்களில் தக்பீர் சொல்வார்கள் அதன் முன்னும் பின்னும் எதையும் தொழ மாட்டார்கள். அறிவிப்பாளர் அம்ரு பின் ஆஸ் (ரலி) நூல்: அஹ்மத்.

இரண்டு பெருநாள்களிலும் ஜூம்ஆவிலும் நபி(ஸல்) அவர்கள் முதல் ரக்அத்தில் 'ஸப்பிஹிஸ்ம ரப்பிகல் அஃலா...' என்ற (87வது) அத்தியாயத்தையும் இரண்டாம் ரக்அத்தில் 'ஹல் அதாக்க ஹதீஸூல் காஷியா..' என்ற (88வது) அத்தியாயத்தையும் ஓதுவார்கள். அறிவிப்பாளர் நுஃமான் பின் பஷீர் (ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதி.

இரு பெருநாள் தொழுகைகளில் 'காஃப் வல் குர்ஆனில் மஜீத்' என்ற (50வது) அத்தியாயத்தையும் 'இக்தரபதிஸ்ஸாஅத்' என்ற (54வது) அத்தியாயத்தையும் நபி(ஸல்) அவர்கள் ஓதுவார்கள். அறிவிப்பாளர் உமர் (ரலி) நூல்: திர்மிதி.

நபி(ஸல்) அவர்களும் அபூபக்கர் - உமர் போன்ற நபித் தோழர்களும் (மக்களுக்கு) பிரச்சாரம் செய்யும் முன்பு பெருநாள் தொழுகைகளைத் தொழுவார்கள். அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி, நஸயீ.

உரை நிகழ்த்துவதற்கு முன்பே நபி(ஸல்) அவர்கள் தொழுகையை முடித்தார்கள். பிறகு பிலால் (ரலி) அவர்கள் மீது சாய்ந்தவாறு அல்லாஹ்வுக்கு அஞ்சுமாறும் அவனுக்கு கட்டுப்படுமாறும் கட்டளையிட்டார்கள். தர்மத்தை வலியுறுத்திப் பேசினார்கள். அறிவிப்பாளர் ஜாபிர் (ரலி) நூல்: முஸ்லிம்.
பெருநாளன்று (பெண்களாகிய) நாங்கள் (தொழும் திடலுக்குப்) புறப்பட்டுச் செல்ல வேண்டுமெனவும், திரைமறைவில் உள்ள பெண்களையும் கன்னிப் பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டுமெனவும் கட்டளையிடப்பட்டிருந்தோம். மாதவிலக்கு ஏற்பட்டுள்ள பெண்கள் (தொழும் திடலுக்குச் சென்று) மக்களுக்குப் பின்னால் இருந்து கொண்டு மக்களுடன் சேர்ந்து தக்பீர் கூறுவார்கள். அறிவிப்பாளர் உம்மு அத்தியா (ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்.
புஆஸ் (எனும் போர்) பற்றி அன்ஸாரிகள் இயற்றிய கவிதைகளை இரண்டு சிறுமிகள் பாடிக் கொண்டிருந்தனர். அங்கு வந்த அபூபக்கர்(ரலி) அவர்கள் இறைத்தூதருடைய இல்லத்தில் ஷைத்தானின் இசைக் கருவிகளா... என்று கேட்டார்கள். இதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் அபூபக்கரே! அந்தச் சிறுமிகளை விட்டுவிடும் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் பெருநாள்கள் உள்ளன. இது நமக்குரிய பெருநாளாகும் என்றார்கள் இது பெருநாள் தினத்தில் நடந்தது. அறிவிப்பாளர் அன்னை ஆயிஷா (ரலி) நூல்: புகாரி.

தப்ஸ் அடித்து பாடிக்கொண்டிருந்த இரண்டு சிறுமிகளைப் பார்த்து அபூபக்கர்(ரலி) அதட்டினார்கள். அதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள் அந்த சிறுமிகள் பாடுவதை விட்டு விடுங்கள். இது பெருநாளைக்குரிய தினமாகும் என்றார்கள். அறிவிப்பாளர் அன்னை ஆயிஷா (ரலி) நூல்: புகாரி.

பித்ரு ஸகாத்-பெருநாள் தர்மம்

பெருநாள் தர்மமும் நோக்கமும்.

"பித்ரு ஸகாத், நோன்பாளி வீணான காரியங்களில் ஈடுபட்டதனால் ஏற்படும் பாவத்தைத் தூய்மைப் படுத்துவதாகவும், ஏழைகளுக்கு உணவுக்கு வாய்ப்பாகவும் அமைந்துள்ளது, யார் அதனை தொழுகைக்கு முன்பே கொடுத்து விடுகிறாரோ அதுதான் ஒப்புக் கொள்ளப்பட்டப் பெருநாள் தர்மமாகும் யார் பெருநாள் தொழுகைக்குப்பின் அதனை வழங்குகிறாரோ அது (பெருநாள் தர்மமாகாது மாறாக அது சாதாரண) தர்மமேயாகும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்- அபூதாவூத், இப்னுமாஜா, தாரகுத்னீ. ஹாகீம்.

"பித்ரு ஸகாத் என்பது நோன்பு வைத்திருக்கும்போது நோன்பாளி வீணான காரியங்களில் ஈடுபட்டதற்குப் பரிகாரமாகவும் ஏழைகளின் (அன்றைய) உணவுக்கு வழியாக இருப்பதற்காகவும் நபி (ஸல்) அவர்கள் விதியாக்கினார்கள். அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்- அபூதாவூத், இப்னுமாஜா, தாரகுத்னீ, பைஹகீ.

நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தர்மத்தைக் கடமையாக்கி ''இன்றைய தினம் ஏழைகளைத் தேவையற்றவர்களாக்குங்கள்'' என்றும் கூறினார்கள். அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) நூல்கள்: பைஹகீ, தாரகுத்னீ.

பெருநாள் தர்மம் எப்போது, தொழுகைக்கு முன்பா? பின்பா?

பித்ரு ஸகாத்தை பெருநாள் தொழுகைக்கு மக்கள் புறப்படு முன்பே வழங்கிவிட வேண்டுமென நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத், நஸயீ, அபூதாவுத், திர்மிதீ.

நபித்தோழர்கள் பெருநாளைக்கு ஒருநாள் முன்பாக அல்லது இரண்டு நாட்களுக்கு முன்பாக இத்தர்மத்தை வழங்குபவர்களாக இருந்தனர். அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) நூல்- புகாரி.

பெருநாள் தர்மத்தின் அளவு.

முஸ்லிமான ஆண்கள் பெண்கள், பெரியவர் சிறியவர், அடிமை சுதந்திரமானவர் ஆகிய அனைவருக்கும் பேரீத்தம்பழம் அல்லது கோதுமை ஆகியவற்றிலிருந்து பெருநாள் தர்மம் தலா ஒரு 'ஸாவு' என்று நபி (ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்தனர். அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) புகாரி, முஸ்லிம், அஹ்மத், நஸயீ, அபூதாவுத், திர்மிதீ, இப்னுமாஜா.

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நாங்கள் உணவுப் பொருட்களில் ஒரு ஸாவு பித்ருத் தர்மம் வழங்குவோம் அன்றையதினம் எங்களின் உணவாக கோதுமையும் உலர்ந்த திராட்சையும் இருந்தது. அறிவிப்பாளர் அபூஸயீத் (ரலி) புகாரி.

அனஸ் (ரலி) என்ற நபித்தோழரிடம் ஒருவர் ஸாவு (அளவைப்) பற்றிக் கேட்டபோது இந்த அளவையே கூறினார்கள், கேள்வி கேட்டவர் நீங்கள் அபூ ஹனீஃபா எனும் பெரியாருக்கு மாற்றமாகச் சொல்கிறீர்களே, என்று கேட்டார் இதைக்கேட்ட அனஸ் (ரலி) அவர்கள் கடும் கோபம் கொண்டு பல நபித்தோழர்களிடம் இருந்த 'ஸாவு' என்னும் அளவைக் கொண்டுவரச் செய்து அதை மக்களிடம் காட்டி 'இதில்தான் நாங்கள் அளந்து பெருநாள் தர்மம் செய்வோம்' என்று கூறினார்கள் அவர்கள் காட்டிய 'ஸாவு' என்பது அவர்கள் கூறிய அளவைக் கொண்டதாகவே இருந்தது. (நூல்கள்: தாரகுத்னீ, பைஹகீ)

(இருகைகளையும் சேர்த்து ஒரு பொருளிலிருந்து நான்குமுறை அள்ளி அளந்து போடுவதே ஒரு 'ஸாவு' என்பதன் அளவாகும்)

நபி(ஸல்) அவர்களின் காலத்தில் கோதுமை - பேரீத்தப்பழங்கள் பெருநாள் தர்மமாக கொடுக்கப்பட்டதால் நாமும் அதையே கொடுக்க வேண்டும் என்று விளங்கிக் கொள்ளக்கூடாது. இன்றைக்கு நம்முடைய உணவு முறை எதுவாக இருக்கிறதோ அதைத்தான் உணவாக கொடுக்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் அவர்களின் உணவுப் பொருள்கள் எதுவோ அதுவே பெருநாள் தர்மமாக வழங்கப்பட்டது நாம் மேலே எடுத்துக்காட்டியுள்ள அபூ ஸயீத் (ரலி) அவர்களின் செய்தியிலிருந்து இதை விளங்கலாம்.

இன்றைக்கு நமது உணவு முறையில் அரிசியே பெரும்பங்கு வகிப்பதால் நாம் அரிசியை ஒரு ஸாவு தர்மமாக வழங்கலாம். இதர உணவுப் பொருள்களுக்கும் இதுதான் பொருந்தும். உணவுப் பொருளாக இல்லாமல் பணமாக கொடுக்கலாமா.. என்றால் அவ்வாறு கொடுப்பதில் எந்த தவறும் இல்லை என்றே தோன்றுகிறது.

தஸ்பீஹ் தொழுகை துஆ


தஸ்பீஹ் தொழுகையின் இறுதியில் அல்லது தொழுது முடித்தபிறகு இந்த துஅவை ஓதவுமுது சிறப்பானதாகும்.

اَللّٰهُمَّ اِنِّىْ أَسْئَلُكَ تَوْفِيْقَ اَهْلِ الْهُدٰى وَاَعْمَالَ اَهْلِ الْيَقِيْنِ ، وَمُنَاصَحَةَ اَهْلِ التَّوْبَةِ ، وَعَزْمَ اَهْلِ الصَّبْرٍ ، وَجِدَّ اَهْلَ الْخَشْيَةِ ، وَطَلَبَ اَهْلِ الرَّغْبَةٍ ، وَتَعَبُّدَ اَهْلِ الْوَرْعِ ،وَعِرْفَانَ اَهْلِ الْعِلْمِ ، حَتّٰى اَخَافُكَ اللّٰهُمَّ اِنِّيْ أَسْئَلُكَ مَخَافَةً تَحْجُزُنِىْ عَنْ مَّعَاصِيْكَ ، حَتّٰى اَعْمَلَ بِطَاعَتِكَ عَمَلًا اَسْتَحِقُّ بِهِ رِضَاكَ ، وَحَتّٰى اُنَاصِحَكَ بِاتَّوْبَةِ خَوْفًا مِّنْكَ ، وَحَتّٰى اَخْلُصَ لَكَ النَّصِيْحَةَ حَيَاءً مِّنْكَ ، وَحَتّٰى اَتَوَكَّلُ عَلَيْكَ فِى الْاُمُوْرِ حُسْنَ ظَنٍّ بِكَ ، سُبْحَانَ خَالِقِ النَّارِ .  رَبَّنَا اَتْمِمْ لَنَا نُوْرَنَا وَاغْفٍرْ لَنَآ اِنَّكَ عَلٰى شَيْئٍ قَدٍيْرٌ بِرَحْمَتِكَ يَآاَرْحَمَ الرَّاحِمِيْنَ
இதனை ஓதி முடித்தபின் ஸலாம் கொடுத்த பின் தன்னுடைய தேவைகளை அல்லாஹ்விடம் கேட்கவும்

பொருள்: யா அல்லாஹ்! நிச்சயமாக நான் உன்னைப் பயப்படுவதற்காக நேர்வழி உடையவர்களுக்கு நீ செய்தது போன்ற நல்லுதவியையும் உறுதியுடையவர்களின் அமல்களையும், தவ்பா உடையவர்களின் தூய செயலையும், பொறுமையுடையவர்களின் உறுதியையும் (உன்னை) பயந்தவர்களின் முயற்சியையும், ஆர்வமுள்ளோரின் தேட்டத்தையும், பேணுதலுடையவர்களின் வணக்கத்தையும் கல்விமான்களின் ஞானத்தையும் உன்னிடம் நான் வேண்டுகிறேன்.
யா அல்லாஹ்! உனக்கு மாறு செய்வதை விட்டும் என்னைத் தடுக்கும்படியான பயத்தை உன்னிடம் நான் வேண்டுகிறேன். (ஏனெனில்) உன்னுடைய திருப்திக்கு எதைக் கொண்டு நான் தகுதி பெறுவேனோ அத்தகைய அமலை செய்து உனக்கு வழிபடுவதின் மூலமும், உன்னை பயந்து வழிபடுவதின் மூலமும், உன்னைப் பயந்து தவ்பாச் செய்வதில் உனக்கு நான் கலப்பற்ற தூய எண்ணத்துடன் இருப்பதற்காகவும், நான் உன்னை தூய எண்ணத்துடன் நேசிப்பதற்காகவும், எல்லாக் காரியங்களிலும் உன்னிடம் நல்லெண்ணம் வைத்து உன்மீது நான் நம்பிக்கை வைப்பதற்காகவும் (உன் பயத்தை வேண்டுகிறேன்) ஒளிபடைத்த நீ மகாத்தூயவன். எங்களுடைய இரட்சகனே! எங்களின் ஒளியை எங்களுக்கு நீ நிரப்பமாக்கி வைத்து எங்களை மன்னிப்பாயாக! நிச்சயமாக நீ எல்லாப் பொருட்களின் மீதும் சக்தி பெற்றவன். அருளாளர்களிலெல்லாம் மாபெரும் அருளாளனே! உன்னுடைய அருளால் இவற்றை எங்களுக்கு அருள்வாயாக!
இதனை ஓதி முடித்தபின் ஸலாம் கொடுத்த பின் தன்னுடைய தேவைகளை அல்லாஹ்விடம் கேட்கவும்

இறையருள் இறங்கும் லைலத்துல் கத்ர்

97ம் அத்தியாயமாக அல்குர்ஆனில் இடம் பெற்றுள்ள இச்சூறாலைலதுல் கத்ர் எனும் மகத்தான ஒரு இரவு குறித்துப் பேசுகின்றது. இந்த இரவில்தான் முதல் முதலாக உலகின் வானுக்கு அல்குர்ஆன் ஒட்டுமொத்தமாக அருளப்பட்டது. பின்னர் காலத்திற்கும், தேவைக்குமேற்ப சிறுகச் சிறுக 23 வருட இடைவெளிக்குள் முழுக் குர்ஆனும் நபி(ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது. இந்த இரவு ஆயிரம் மாதங்களை விட மேலானதாகக் கருதப்படுகின்றது. இந்த இரவில் வானவர்களும் அவர்களின் தலைவர் ஜிப்ரீல்(அலை) அவர்களும் பூமிக்கு இறங்குகின்றனர். இதுதான் இந்த அத்தியாயத்தின் சாரம்சமாகும்.

மகத்துவமிக்க இரவில் இதை நாம் இறக்கினோம்
என இதை இங்கு குறிப்பிடப்படுவது அல்குர்ஆனையே குறிக்கும். இதற்கு முன்னைய அத்தியாயத்தில் முதல் முதல் அருளப் பட்ட இக்ரஃ அத்தியாயம் அமையப் பெற்றிருப்பது நல்லதொரு தொடர்பாகத் தென்படுகின்றது.
இந்தக் குர்ஆன் ஒட்டுமொத்தமாக ஒரே இரவில் உலகின் முதல் வானுக்கு அருளப்பட்டது. அதனையே இந்த வசனம் கூறுகின்றது. இந்த இரவு குறித்து,

இதை பாக்கியம் நிறைந்த இரவில் நாம் அருளினோம். நாம் எச்சரிக்கை செய்வோராவோம்” (44:37) என்று குர்ஆன் கூறுகின்றது.

எனவே, அந்த இரவு முபாரக்கான இரவு எனவும், கத்ருடைய இரவு எனவும் குர்ஆன் குறிப்பிடுகின்றது.

ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழி காட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை – தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும். எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும். அல்லாஹ் உங்களுக்கு இலகு வானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை. குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர் வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத் துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்)”. (2:185) என அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது. எனவே, எவ்வித சந்தேகமுமின்றி அல்குர்ஆன் அருளப்பட்ட மகத்துவமான அருள்பொதிந்த இரவு ரமழான் மாதத்தில்தான் இடம்பெற்றுள்ளது. இதில் இரண்டாம் கருத்துக்கு எள்ளளவும் இடம் கிடையாது. “கத்ர்” என்றால் கண்ணியம், மகத்துவம் என்ற கருத்துக்கும் இடம்பாடுள்ளது. அதேநேரம், ஒரு காரியத்தைத் திட்டமிட்டுத் தீர்மானிப்பதையும் இது குறிக்கும். இந்தக் கருத்தில்தான் கழா கத்ர் என நாம் குறிப்பிடுகின்றோம். இந்த இரவுக்கு கத்ருடைய இரவு என ஏன் பெயர் குறிப்பிடப்பட்டது என்பது குறித்து இமாம் படீகவி(ரஹ்);

இந்த இரவில் தான் அடுத்த வருடத்திற்கான உலக மனித செயற்பாடுகள் நிர்ணயிக்கப்படுகின்றனஎனக் குறிப்பிடுவதுடன் அதற்குஅதில் முக்கியமான ஒவ்வொரு விஷயங்களும் தீர்மானிக்கப்படுகிறது”.(44:4) என்ற வசனத்தையும் சான்றாகக் குறிப்பிடுகின்றார்கள். படைப்பினங்களைப் படைப்பதற்கு ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கழா கத்ர் தீர்மானிக்கப்பட்டு விட்டது. எனினும், இந்த இரவில் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட “கத்ர்” மீண்டும் இந்த இரவில் தீர்மானிக்கப்படுவதாகவே கருத முடியும்” எனக் குறிப்பிடுகின்றார்.
கத்ருடைய இரவு என்பது மகத்துவமான இரவு என அர்த்தப்படுத்துவோர்

அல்லாஹ்வை மதிக்கவேண்டிய விதத்தில் அவர்கள் மதிக்க வில்லை(6:91) என்ற வசனத்தை ஆதாரமாகக் கூறுவர். “வமா கதருல்லாஹ்” அல்லாஹ்வை அவர்கள் மதிக்கவில்லை என்று அர்த்தப்படுவது போல் கத்ருடைய இரவு என்பது மகத்துவமுடைய இரவு என அர்த்தப்படும் என்பர். இந்த இரு விளக்கமும் மறுக்கப்படக் கூடியவையல்ல.

அன்றைய இரவில் செய்யப்படும் நல்ல அமல்கள் அல்லாஹ்விடத்தில் மிக மகத்துவம் பெற்றதால் இவ்வாறு கூறப்படுவதாகவும் சிலர் கொள்வர். இதுவும் முரண்பட்ட விளக்கமாகக் கொள்ளத்தக்கதல்ல.
மகத்துவமிக்க இரவு என்றால் என்ன வென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது.
அந்த இரவின் சிறப்புக் குறித்த முதல் செய்தி இதுவாகும். அது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்ததாகும். சுமார் 83 வருடங்களை விட சிறப்பு வாய்ந்ததாகும். ஏற்கனவே கூறிய அருள் பொதிந்த இரவு என்பதும் இதற்குப் பொருந்திப் போகின்றது. ஒரு இரவு 83 வருடங்களை விட அதிக சிறப்புப் பெறுவது என்பது மிகப்பெரிய அருளாகும். ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது என்பதற்கு அந்த இரவில் செய்யப்படும் நல்லமல்கள் அஃதல்லாத ஆயிரம் மாதங்கள் செய்யும் அமல்களை விடச் சிறந்ததாகும் என்ற கருத்தை முஜாஹித், அம்ரிப்னு கைஸ் போன்றோர் குறிப்பிடுகின்றனர்.
மற்றும் சிலர் “லைலதுல் கத்ர்” இல்லாத ஆயிரம் மாதங்களை விட அந்த இரவு சிறந்தது என்று குறிப்பிடுவர்.
இந்த ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த இரவை இந்த மாதத்திற்கு அல்லாஹ் வழங்கியதற்கு இந்த உம்மத்தின் ஆயுட்காலம் முன்னைய கால மக்களின் வாழ்வுக் காலத்தை விடக் குறைந்தது என்பது முக்கிய காரணமாகும்.
இந்த மகத்துவமிக்க இரவு ரமழான் மாதத்தில் வரும். எப்போது வரும் என்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. அந்த இரவு எது என்பதை அல்லாஹ் மறைத்து விட்டான் என்றே கூற வேண்டும்.
எனக்கு “லைலதுல் கத்ர்” காட்டப்பட்டது. பின்னர் அது மறக்கடிக்கப்பட்டு விட்டது. அதனை ரமழான் கடைசிப் பத்தின் ஒற்றைப் படையான இரவுகளில் தேடிக் கொள்ளுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

நான் லைலதுல் கத்ரை அறிவிக்க வந்தேன். உங்களில் இருவர் சர்ச்சைப்பட்டுக் கொண்டிருந்தனர். அது எனக்கு மறக்கடிக்கப் பட்டுவிட்டது. அது உங்களுக்கு நல்லதாகவே இருக்கும்” (முஸ்லிம்)
“அந்த இரவு, நபியவர்களுக்கு மறக்கடிக்கப்பட்டு விட்டது. அது எது என்பதை மக்கள் அறியாமல் இருப்பதே நல்லதாகும். எனினும் நபி(ஸல்) அவர்கள் அந்த இரவை அடைவதற்காகக் கடைசிப் பத்து பூராகவும் முயற்சித்துள்ளார்கள்” என ஏராளமான ஹதீஸ்கள் கூறுகின்றன. எனவே, அந்தப் மகத்துவ மிக்க இரவை அடைந்து கொள்வதற்காக ரமழான் மாதத்தின் குறிப்பாக இறுதிப் பத்து பூராகவும் முயற்சிக்க வேண்டும்.
இந்த உண்மையை அனைத்து உலமாக்களும் அறிந்திருந்தாலும் ரமழான் ஹதியாவைப் பிரதானமான இலக்காகக் கொண்டு 27ம் இரவு சிறப்பிக்கப்பட்டு வருகின்றது. அத்துடன் சிலர் இரவுத் தொழுகையைக் கூட விட்டு விடுகின்றனர். இந்த வழிமுறையால் பலரும் “லைலதுல் கத்ரை” இழக்கும் அபாய முள்ளது. எனவே, அந்த இரவை அடைந்து கொள்ள அனைவரும் முயலக் கடமைப் பட்டுள்ளனர்.
அந்த இரவில் நின்று வணங்குவது முன்னைய பாவங்கள் அனைத்தையும் அழித்து விடும். எனவே, இறுதிப் பத்து முழுவதும் முயற்சிசெய்து அந்தப் பாக்கியத்தை அடைய முயல்வோமாக.
வானவர்களும் ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். இங்கே அந்த இரவின் முக்கிய சிறப்பம்சம் கூறப்படுகின்றது. அந்த இரவில் மலக்குகளும் “ரூஹ்” எனப்படும் அவர்களது தலைவர் பரிசுத்த ஆவியான ஜிப்ரீல்(அலை) அவர்களும் இறங்குகின்றனர்.
அத்துடன் அவர்கள் அல்லாஹ்வின் அடுத்த வருடத்திற்கான கட்டளைகளையும் சுமந்து வருகின்றனர். இதைத்தான் 44:4 வசனமும் கூறுகின்றது. அடுத்து “கத்ர்” உடைய இரவு என்பதும் இந்த அர்த்தத்திற்குப் பொருத்தமாகவுள்ளது.
“ஸலாம்” இது வைகறை வரை இருக்கும். என்று இந்த சூறா முடிவடைகின்றது. அந்த இரவு காலை வரை அமைதி பொருந்தியதாக இருக்கும் என்றும் அன்று இரவு முதல் பஜ்ர் வரை வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நல்லடியார்களை மலக்குகள் காணும் போதெல்லாம் ஸலாம் கூறுவார்கள் (ஸஃபுல் ஈமான்) என்றும் இதற்கு விளக்கம் கூறப்படுகின்றது.
 அந்த இரவில் மலக்குகளின் ஸலாத்தைப் பெற நாடுவோர், அந்த இரவைப் பயன்படுத்தி மறுமையில் ஸலாத்தை – பாதுகாப் பையும் அமைதியையும் – அடைய விரும்பு பவர்கள் அந்த இரவில் இஸ்லாம் கூறும் இனிய இபாதத்துக்களில் ஈடுபட்டு இறையருள் பெற இன்றே உறுதி பூணுவோமாக!

லைலத்துல் கத்ர்

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.
லைலத்துல் கத்ர் என்பது,
ரமளான் மாதத்தின் கடைசிப் பத்தின் ஒற்றைப்படை நாட்களில் வரக்கூடிய ஓர் இரவிற்குச் சொல்லப்படும். இந்த இரவில் செய்யும் வணக்கத்திற்கு ஆயிரம் மாதங்கள் செய்யும் வணக்கத்திற்குக் கிடைக்கும் நன்மையை விட அதிக நன்மைகளை, அல்லாஹ் வழங்குகின்றான். அதாவது ஒரு இரவு செய்யும் அமலினால் 83 வருடங்கள் செய்யும் அமலுக்குக் கிடைக்கும் நன்மையை விட அதிக நன்மைகள் கிடைக்கின்றது. இதனால்தான் நபி கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் அந்த இரவை அடைந்து கொள்வதற்காக நோன்பின் கடைசிப்; பத்து நாட்களில் இஃதிகாஃப் இருப்பார்கள். ’83 வருடம் நாம் வாழ்வோமா?’ என்பதே கேள்விக்குறியானது! ஆனால் ஒரு இரவில் செய்யும் அமலுக்கு அவ்வளவு நன்மையை அல்லாஹ் நமக்கு அள்ளி வழங்குகின்றான். இந்த அரிய சந்தர்ப்பத்தை தவற விடாதீர்கள். ரமளான் மாதத்தின் மற்ற 20 நாட்களை விட கடைசிப் பத்து நாட்களில் நபி (ஸல்) அவர்கள் அதிக வணக்கத்தில் ஈடுபடுவார்கள். முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட கண்மணி நாயகம் நபி (ஸல்) அவர்களே இப்படி அதிக அமல்கள் செய்திருக்கும் போது, நம்மைப் போன்றவர்கள் எவ்வளவு அதிகம் அமல்களில் ஈடுபட வேண்டும் என்பதை சிந்தித்துப்பாருங்கள்! ஆகவே, இச்சிறப்பான இரவில் தொழுவது, குர்ஆன் ஒதுவது, திக்ர் செய்வது, பாவமன்னிப்புத் தேடுவது, தர்மம் செய்வது போன்ற நற்கருமங்களில் நாம் அதிகம் ஈடுபடவேண்டும்.
அல்லாஹ் நம் அனைவருக்கும் அந்த சிறப்பான இரவைப் பெற்று, நல் அமல்கள் புரிய வாய்ப்பளிப்பானாக!
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மத் வஅலா ஆலி முஹம்மத் வ பாரிக் வஸல்லிம்....

நோன்பு பயனின்றிக் கழிவதால் யாருக்கு இழப்பு

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:

حَدَّثَنَا ‏ ‏آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي ذِئْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سَعِيدٌ الْمَقْبُرِيُّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ
‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَنْ لَمْ يَدَعْ قَوْلَ ‏ ‏الزُّورِ ‏ ‏وَالْعَمَلَ بِهِ فَلَيْسَ لِلَّهِ حَاجَةٌ فِي أَنْ يَدَعَ طَعَامَهُ وَشَرَابَهُ ‏

'யார் பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடவில்லையோ அவர் தமது உணவையும் குடிப்பையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை' (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி1903). 

சிலர் நோன்பு வைத்த நிலையிலும் தீமைகளைக் கைவிடாமல்,பொய் பேசுவது, கெட்ட வார்த்தைகள் பேசுவது, சினிமா வீடியோக்கள் சீரியல்கள், ஆபாச இணையம் என்று பலவிதமான மார்க்க முரணான கேளிக்கைகளில் ஈடுபடுவது ஆகிய செயல்களால் தமது நோன்பையும் நன்மைகளையும் தமது மறுமை வாழ்க்கையையும் பாழாக்குபவர்களாக வாழ்வதையும் பார்க்கிறோம். அல்லாஹ் அவர்களுக்கும் நேர்வழி காட்டுவானாக என்று பிரார்த்திப்பதுடன் அவற்றால் ஏற்படும் தீமைகளை அவர்களுக்கு நல்ல முறையில் உணர்த்தி அவர்களையும் நேர்வழிப்படுத்த நாம் முயல வேண்டும்.

சிலர் இந்த மாதத்திலும் நோன்பு மட்டும் வைத்துக் கொண்டு தொழாமல் பாராமுகமாக இருப்பதும், இன்னும் சிலர் தூங்குவதில் அதிக நேரத்தைக் கழிப்பதும் உண்டு. இதைவிடவும் வேதனை, இன்னும் சிலர் அலட்சியமாக நோன்பும் வைக்காமல் தொழுகைக்கும் செல்லாமல் வெறுமனே ஈத் பெருநாள் அன்று மட்டும் பள்ளிக்கு வருபவர்களும் நம் சமுதாயத்தில் உண்டு என்பது கசப்பான உண்மையாகும்.

அல்லாஹ் அவர்களுக்கும் நேர்வழி காட்டுவானாக!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏خَالِدُ بْنُ مَخْلَدٍ وَهُوَ الْقَطَوَانِيُّ ‏ ‏عَنْ ‏ ‏سُلَيْمَانَ بْنِ بِلَالٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبُو حَازِمٍ ‏ ‏عَنْ ‏ ‏سَهْلِ بْنِ سَعْدٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ ‏
‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنَّ فِي الْجَنَّةِ بَابًا يُقَالُ لَهُ الرَّيَّانُ يَدْخُلُ مِنْهُ الصَّائِمُونَ يَوْمَ الْقِيَامَةِ لَا يَدْخُلُ مَعَهُمْ أَحَدٌ غَيْرُهُمْ يُقَالُ أَيْنَ الصَّائِمُونَ فَيَدْخُلُونَ مِنْهُ فَإِذَا دَخَلَ آخِرُهُمْ أُغْلِقَ فَلَمْ يَدْخُلْ مِنْهُ أَحَدٌ ‏

சொர்க்கத்தில் ‘ரய்யான்’ என்று கூறப்படும் ஒருவாசல் இருக்கிறது. மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். நோன்பாளிகள் எங்கே? என்று கேட்கப்படும். உடனே அவர்கள் எழுவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு எவரும் நுழைய மாட்டார்கள். (அறிவிப்பாளர்: சஹ்ல்(ரலி) நூல்: புகாரி - 1896).

மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزِّنَادِ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْرَجِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏
‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏الصِّيَامُ ‏ ‏جُنَّةٌ ‏ ‏فَلَا ‏ ‏يَرْفُثْ ‏ ‏وَلَا يَجْهَلْ وَإِنْ امْرُؤٌ قَاتَلَهُ أَوْ شَاتَمَهُ فَلْيَقُلْ إِنِّي صَائِمٌ مَرَّتَيْنِ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ ‏ ‏لَخُلُوفُ ‏ ‏فَمِ الصَّائِمِ أَطْيَبُ عِنْدَ اللَّهِ تَعَالَى مِنْ رِيحِ الْمِسْكِ يَتْرُكُ طَعَامَهُ وَشَرَابَهُ وَشَهْوَتَهُ مِنْ أَجْلِي ‏ ‏الصِّيَامُ لِي وَأَنَا أَجْزِي بِهِ وَالْحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا ‏

நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயம் ஆகும். எனவே நோன்பாளி கெட்ட பேச்சுக்களை  பேசவேண்டாம்; அறிவீனமான செயல்களில் ஈடுபட வேண்டாம். யாரேனும் ஒரு நோன்பாளியைத் தீயசொல்லால் திட்டினாலோ வீண் வம்புக்கு வந்தாலோ 'நான் நோன்பாளி' என்று அவர் இருமுறை கூறிவிடவும். என் உயிரைக் கைவசம் வைத்திருப்பவன் மீதாணை! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் மணம், அல்லாஹ்வின் கணிப்பில் கஸ்தூரியின் நறுமணத்தைவிடச் சிறந்ததாகும். அல்லாஹ் கூறினான்: எனக்காக நோன்பாளி தம் (ஹலாலான) உணவையும் குடிப்பையும் உடலிச்சையையும் துறந்து விடுகிறார். (அவரது) நோன்பு எனக்கு மட்டுமே உரியது.அதற்கு நானே கூலி வழங்குவேன். (நோன்பின்போது செய்யப்படும்) ஒரு நன்மை என்பது பத்து மடங்குகள் பெருகக் கூடியதாகும். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி 1894) .

பாவங்களிலிருந்து காக்க வேண்டிய நோன்பு பயனின்றிக் கழிவதால் யாருக்கு இழப்பு என்பதை நாம் சிந்திக்கக் கடமைப் பட்டிருக்கிறோம்.

அல்லாஹ்வின் தூதர் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் நோன்பை கேடயத்துக்கு உவமையாக்கிக்  குறிப்பிட்டுள்ளார்கள். கேடயம் உறுதியாக இருந்தால் அதைத் தாங்கிய ஒருவர் தன்னைத் தாக்கும் எதிரிகளிடமிருந்து தன்னை காத்துக்கொள்ள இயலுவதைப்போல், நோன்பு எனும் இக்கேடயம் உறுதியாக இருந்து இறையச்சத்தை வழங்கினால் இந்த வாழ்க்கையில் சந்திக்கும் பல விதமான தீய காரியங்களின் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள இயலும் என்று இதன் மூலம் உணரலாம்.

மேலும் படைவீரர்கள் எவ்வாறு அன்றாடம் பயிற்சிகளும் சிறப்புப் பயிற்சிகளும் பெற்றுக் கொண்டே எப்போது ஏற்படும் என்று அறியாத, அல்லது சில நேரங்களில் ஒரு போரும் நடைபெறாமல் ஓய்வு பெறும் நிலையிலும், போருக்குத் தயார் நிலையில் இருக்கப் பயிற்சி தொடர்ந்து எடுக்கின்றனரோ அதே போல் நாமும் இந்த ரமளான் மாத நோன்பு மற்றும் திங்கள், வியாழன், மாதம் மூன்று நோன்புகள் போன்ற ஸுன்னத்தான நோன்புகள் மற்றும் உபரியான, நபிலான நோன்புகள், மேலும் இறையச்சத்தை எற்படுத்தும் செயல்கள் மூலம் நமது ஈமானையும் இறையச்சத்தையும் உறுதியாக்கி, சமுதாயத்தில் மலிந்து கிடக்கும் வழிகேடுகளிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முயல்வோமாக!

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக! ஆமீன்!

அணியும் நகைகளுக்கு ஜகாத் உண்டா?

மவ்லவி, ஹாஃபிள், நூர் முஹம்மது ஃபாஜில் பாகவி [
நகைக்கு ஜகாத் இல்லை என்ற கூற வலுவான சான்றுகள் கிடைக்கவில்லை என்ற காரணத்தினால்தான், இராக்கில் இருந்த ஆரம்ப காலகட்டத்தில் நகைக்கு ஜகாத் இல்லை என்று கூறி வந்த இமாம் ஷாஃபி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் எகிப்து வந்த பின் அவ்வாறு கூறுவதை நிறுத்திக் கொண்டு,
"நகையில் ஜகாத் உண்டு என்று கூறப்படுகிறது. நான் இது விஷயத்தில் நல்ல தீர்வை தரவேண்டி அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன்." என்று கூறினார்கள். (அல் உம், தர்கீப் வ தர்ஹீப்)
ஆரம்ப காலத்தில் ஜகாத் இல்லை என்று கூறிக் கொண்டிருந்த இமாம் ஷாஃபி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் இறுதியில் அக்கருத்தை மாற்றிக் கொண்டார்கள் என்பதை "அல் உம்" என்ற அவரது நூலில் பல இடங்களில் வெளிப்படுத்தி உள்ளார்கள்.

எனவே ஷாஃபி மத்ஹபின்படி நகைக்கு ஜகாத் இல்லை என்று கருதி ஜகாத் வழங்காமல் இமாம் ஷாஃபி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் மீது பழியைப் போட்டுவிட்டு (மறுமையில்) தப்பித்து விடலாம் என்று கருத வேண்டாம். மறுமை நாளில் யாரும் யாரின் மீதும் பழி சுமத்தி விட்டு இறைவனிடமிருந்து தப்பி விட முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

"நகைகளுக்கு ஜகாத் வழங்கி விட்டால் அதனை அணிந்து கொள்வதில் குற்றமில்லை" என அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: உர்வத் பின் ஜுபைர், நூல்: தாரகுத்ணி, பைஹகி)
'யார் தங்கத்தையும் - வெள்ளியையும் சேமித்து வைத்து அல்லாஹ்வின் பாதையில் அவற்றை செலவு செய்யாமல் வாழ்கிறார்களோ அவர்களுக்குக் கடும் தண்டனையுண்டு" (அல்குர்ஆன் - 9:34,35)

இறைவழியில் செலவு செய்யாமல் சேமித்து வைப்போருக்குத் தண்ணடணையுண்டு என்று கூறுவதால் அவற்றின் மீதும் ஜகாத் கடமையாகிறது. பெண்கள் தங்கத்தைச் சேர்த்து வைக்கவில்லை, அதன் மூலம் தம்மை அழகுபடுத்திக் கொள்கிறார்கள் அதனால் அதற்கு ஜகாத் தேவையில்லை என்றெல்லாம் யாரும் சமாதானம் சொல்ல முடியாது.
தம்மை அழகுபடுத்திக் கொண்டு தொழ வந்த பெண்களிடம்தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உபதேசம் செய்கிறார்கள். உடனே பெண்கள், தமது காது வளையங்கள், கால் மெட்டிகள், வளையல்கள் எல்லாவற்றையும் கழற்றி அவற்றை இறைவனின் பாதையில் கொடுக்கிறார்கள். (நூல்: புகாரி)]
தங்கம், வெள்ளி ஆகியவை நாணயங்களாகவோ, கட்டிகளாகவோ வியாபாரத்திற்காக உள்ள ஆபரணங்களாகவோ, உபயோகிக்கத் தடைசெய்யப்பட்ட ஆபரணங்களாகவோ, (ஆண்கள் அணியும் ஆபரணங்கள் உருவப்படம் பதிக்கப்பட்ட ஆபரணங்கள்) அல்லது பாத்திரங்களாகவோ இருந்தால் அவற்றுக்கு ஜகாத் வழங்கியே ஆக வேண்டும் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு அறவே இல்லை.
ஆனால், பெண்கள் அணியும் நகைகளுக்கு ஜகாத் வழங்க வேண்டுமா? என்பதில் அன்றைய நபித்தோழர்கள் முதல் இன்றைய மார்க்க அறிஞர்கள் வரை அனைவரிடையேயும் பலத்த கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இதில் பாமர மக்கள்தான் அதிகம் குழப்பம் அடைந்துள்ளனர்.
இக்கருத்து வேறுபாடு ஏற்படக் காரணம் ஆபரணங்களுக்கு ஜகாத் உண்டு அல்லது இல்லை எனக் கூற குர்ஆனிலும் நபி மொழியிலும் நேரடியான சரியான தெளிவான சான்றுகள் இல்லை என்று கருதப்பட்டதுதான்.
எனவே, குர்ஆன் மற்றும் நபி மொழியின் அடிப்படையில் எந்த கருத்து சரியானதாக இருக்க முடியும்? என்பதைத் தெளிவு படுத்திக் கொள்ளவே இச்சிறிய ஆய்வினை வாசகர்களாகிய உங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன். அல்லாஹ் உண்மையை அனைவருக்கும் தெளிவுபடுத்தி அதனை செயல்படுத்தக் கூடியவர்களாக நம் அனைவரையும் ஆக்கி வைப்பானாக!

நகைக்கு ஜகாத் இல்லை என்போர் முன் வைக்கும் சான்றுகள்
பெண்கள் அணியும் நகைகளுக்கு ஜகாத் இல்லை எனக் கூறும் சாரார் பின் வரும் சான்றுகளை முன் வைக்கின்றனர்.
(1)  
عن عافية بن أيوب عن الليث بن سعد عن أبي الزبير عن جابر عن النبي - قال ليس في الحلي زكاة. (رواه البيهقي في المعرفة, وإبن القيم الجوزي في التحقيق
"நகையில் ஜகாத் இல்லை" என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள். நூல்: மஃரிஃபத்துஸ் ஸுனன் லில் பைஹகி, தஹ்கீக்)
(2) عَنْ أَبِى هُرَيْرَةَ رضى الله عنه عَنِ النَّبِىِّ . قَالَ அ لَيْسَ عَلَى الْمُسْلِمِ صَدَقَةٌ فِى عَبْدِهِ وَلاَ فَرَسِهِ ஞ رواه البخاري
"தனது அடிமை, குதிரை ஆகியவற்றுக்கு தர்மம் (ஜகாத்) வழங்குவது ஒரு முஸ்லிமின் மீது கடமை இல்லை" என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள். நூல்: புகாரி 1464)
தன் உபயோகத்திற்கு அவசியமான குதிரை, பணிவிடைக்குத் தேவையான அடிமை ஆகியவற்றுக்கு ஜகாத் இல்லை என்பதை மேற்கண்ட நபிமொழியிலிருந்து அறிய முடிகிறது. இதன் அடிப்படையில் குடியிருக்கும் வீடு, உடுத்தும் ஆடைகள் ஆகியவை ஜகாத் இல்லை என்ற இனத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. அது போன்றுதான் பெண்கள் அணிந்து கொள்ளும் நகைகள் சொந்த உபயோகப் பொருளாகக் கருதப்பட்டு அதற்கும் ஜகாத் இல்லை என்று கூறப்படுகிறது.
(3) வளர்ச்சி அடையக் கூடிய அல்லது வளர்ச்சிக்கு காரணமாக உள்ள பொருட்களில்தான் ஜகாத் கடமையாகும். தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவை ஆபரணங்களாக மாறியதால் வளர்ச்சிக்குரியது அல்லது வளர்ச்சிக்கு காரணமானது என்ற நிலையிலிருந்து மாறிவிட்டது. எனவே, அவற்றில் ஜகாத் கடமை இல்லை.
(4) "ஆயிஷா, அஸ்மா பின்தா அபீ பக்கர், ஜாபிர் பின் அப்துல்லாஹ், அப்துல்லாஹ் பின் உமர், அனஸ் ரளியல்லாஹு அன்ஹும் ஆகிய ஐந்து நபித் தோழர்கள் நகைகளுக்கு ஜகாத் இல்லை" என்று கூறுவதாக இமாம் அஹ்மத் பின் ஹன்பல் ரஹ்மதுல்லாஹி அலைஹி அறிவிக்கிறார்கள். (பைஹகி)
حدثني يحيى عن مالك عن عبد الرحمن بن القاسم عن أبيه أن عائشة زوج النبي صلى الله عليه وسلم كانت تلي بنات أخيها يتامى في حجرها لهن الحلي فلا تخرج من حليهن الزكاة مؤطأ مالك. كذا رواه البيهقي وإبن أبي شيبة
"அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் தன்னிடம் அனாதைகளாக வளர்ந்து வந்த தனது சகோதரரின் பெண் மக்களுக்குச் சொந்தமான நகைகளுக்கு ஜகாத் வழங்க வில்லை." அறிவிப்பாளர்: காசிம் பின் முஹம்மது. நூல்: முஅத்தா, பைஹகி, இப்னு அபீ ஷைபா.
وحدثني عن مالك عن نافع أن عبد الله بن عمر كان يحلى بناته وجواريه الذهب ثم لا يخرج من حليهن الزكاة
"அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு தன் பெண்மக்களுக்கும், அடிமைப்பெண்களுக்கும் நகை அணிவித்திருந்தார்கள். அவற்றிற்கு அவர்கள் ஜகாத் வழங்கவில்லை." (அறிவிப்பாளர்: நாஃபிஉ நூல்: முஅத்தா)

பலவீனமான நபி மொழி
நகைக்கு ஜகாத் இல்லை என்போர் மேற்கண்டவற்றை தங்களின் கூற்றுக்கு சான்றுகளாக கூறுகின்றனர். இவர்கள் எடுத்து வைக்கும் இச்சான்றுகளை சற்று ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம்.
முதல் சான்றான ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் நபி மொழியில் நகைகளுக்கு ஜகாத் இல்லை என்று தெளிவாகவே கூறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நகைகளுக்கு ஜகாத் இல்லை என்று முடிவுக்கு எளிதாக வரலாம். ஆனால், இந்த செய்தியைத் தனது நூலில் பதிவு செய்துள்ள இமாம் பைஹகி அவர்கள்,
(قال البيهقي: وما يروى عن عافية بن أيوب عن الليث عن أبي الزبير عن جابر مرفوعاً: ليس في الحلي زكاة فباطل لا أصل له, وإنما يروى عن جابر من قوله. وعافية بن أيوب مجهول, فمن إحتج به مرفوعاً كان مغرّراً بدينه.... معرفة السنن والأثار للإمام البيهقي)
"இந்த ஹதீஸ் அடிப்படையற்ற தவறான செய்தியாகும். ஜாபிர் கூறியதாகத்தான் அறிவிக்கப்பட்டுள்ளது. (இறைத்தூதர் கூறியதாக அறிவிப்பது அடிப்படையற்றது.) மேலும் இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஆஃபியத் பின் அய்யூப் நிலை அறியப்படாதவர். இவரின் அறிவிப்பை ஆதாரமாகக் கருதுவோர் இவரின் வணக்க வழிபாடு கண்டு ஏமாற்றம் அடைந்து விட்டனர்...." என்று குறிப்பு எழுதியுள்ளார்கள்.
"ஆஃபியத் பின் அய்யூப் என்பவர் பரவாயில்லாதவர் என்ற நிலையில் உள்ளவர்" என்று அபூ ஜுர்ஆ அவர்கள் கூறியதாக அல் ஜர்ஹ் வத் தஃதீல் என்று நூலில் (7/59) பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்னுல் ஜவ்ஜி, "ஆஃபியத் பின் அய்யூப் என்பவரை யாரும் குறை கூறியதாக நாம் அறியவில்லை" என்றும் "ஆஃபியத் பின் அய்யூப் பலவீனமானவர் எனக் கருத அவர் பற்றிய எந்தக் குறையும் நமக்கு கிடைக்க வில்லை" என இமாம் முன்திரி ஆகியோர் ஆஃபியத் பின் அய்யூப் குறித்து நற்சான்று அளித்துள்ளனர்.
ஆனால், ஒர் அறிவிப்பாளரை ஆதாரமாக ஏற்க வேண்டுமெனில் வணக்க வழிபாடுகளில் சிறந்து விளங்கினால் மட்டும் போதாது. மாறாக நல்ல நினைவாற்றல் உள்ளவர், மறதி இல்லாதவர், பொய் உரைக்காதவர், நேர்மையானவர் போன்ற நம்பகமான அறிவிப்பாளர்களுக்கு உரிய அவசியமான பண்புகள் அவரிடம் இருக்க வேண்டும். இந்த அடிப்படை விதியின்படி, ஆஃபியத் பின் அய்யூப் என்பவர் அறிவிக்கும் செய்திகளை ஆதாரமாகக் கருதுவோர், நம்பகமான அறிவிப்பாளருக்கு இருக்க வேண்டிய இந்த அடிப்படைத் தகுதி இவரிடம் இருந்தது என்ற நற்சான்றினை முதலில் ஆதாரப்பூர்வமாகச் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு சமர்ப்பிக்காத வரை இப்பண்புகள் உள்ளதாக அறியப்படாத ஒருவரின் அறிவிப்பை ஆதாரமாக ஏற்க இயலாது. குறிப்பாக வேறு ஆதாரப்பூர்வமான ஹதீஸிற்கு எதிராக இவர் அறிவிப்பதை ஆதாரமாக ஏற்க முடியாது.
"அவரிடம் ஒரு குறையும் அறியப்படவில்லை" என்ற இப்னுல் ஜவ்ஜியின் கூற்றும், "ஆஃபியத் என்பவரை பலவீனப்படுத்தும் ஒரு குறையும் எனக்கு கிடைக்கவில்லை" என்ற முன்திரி அவர்களின் கூற்றும் ஆஃபியத்திற்கான நற்சான்றாக அமையாது. ஏனெனில், அவரது நிலை என்னவென்று யாராலும் அறிந்து கொள்ளப்படவில்லை என்பதனால்தான் அவர் குறித்து நல்லவர் அல்லது கெட்டவர் என்ற ஒரு செய்தியும் பதிவு செய்யப்படவில்லை. "பராவாயில்லாதவர் என்ற நிலையில் உள்ளவர்" என அபூ ஜுர்ஆ அவர்கள் கூறியதுகூட, ஆஃபியத் என்பாரின் வணக்க வழிபாடுகளை மட்டும் பார்த்து விட்டுதான் என்பது பைஹகியின் கூற்றிலிருந்து தெளிவாகிறது.
ஹதீஸ் கலையின் தலை சிறந்த அறிஞரும், அறிவிப்பாளர்கள் நிலை குறித்து ஆய்வு செய்தவருமான இமாம் பைஹகி அவர்கள் "ஆஃபித் என்பார் நிலை அறியப்படாதவர்" என்று கூறியுள்ள நிலையில், இவரின் அறிவிப்பை ஆதாரமாகக் கருதுவோர், அவரின் நமபகத்தன்மையை - நேர்மையை நிரூபிக்க வேண்டும்.
எனவே, நிலை அறியப்படாத ஒர் அறிவிப்பாளர் இந்நபி மொழியில் இடம் பெற்றுள்ளதால் இது பலவீனமடைகிறது. எனவே நகைகளுக்கு ஜகாத் இல்லை என்ற வாதத்திற்கு இதனைச் சான்றாக கருத முடியாது.
ஒரு வாதத்திற்காக இந்நபி மொழி ஸஹீஹானதுதான் என ஏற்றுக் கொண்டாலும்கூட இந்நபி மொழியின் முழுக் கருத்தையுமே இதனை சான்றாக கூறுபவர்களே ஏற்கவில்லை என்பதை இவர்களின் கூற்றிலிருந்தே அறியலாம். ஏனெனில், "நகை" என்ற வார்த்தை தங்கத்திலான வெள்ளியிலான பெண்கள் அணியும் நகை, ஆண்கள் அணியும் நகை என அனைத்தையும் குறிக்கும் பொதுவான சொல். இந்த ஹதீஸின் அடிப்படையில் நகைக்கு ஜகாத் இல்லை என்றால் ஆண்கள் அணியும் நகையிலும் ஜகாத் இல்லை என்றுதான் கூற வேண்டும். ஆனால், அவ்வாறு இவர்கள் கூறவில்லை. மாறாக ஆண்கள் அணியும் நகைகளுக்கு (ஆண்கள் தங்க நகை அணிவது தடை செய்யப்பட்டுள்ளது. வெள்ளி மோதிரம் அணியத் தடையில்லை) மட்டும் ஜகாத் உண்டு என்று இந்த ஹதீஸிற்கு மாற்றமாகவே கூறிவருகிறார்கள். எனவே இந்த ஹதீஸ் இவர்களாலேயே புறக்கணிக்கப் பட்டுவிட்டது என்றால் இதை எப்படி ஆதாரமாக ஏற்க முடியும் என்பதே நமது கேள்வி.

தவறான ஒப்பீடு
இரண்டாவது சான்றான "அடிமை, குதிரை ஆகியவற்றுக்கு ஜகாத் இல்லை" என்ற நபி மொழி ஆதாரப்பூர்வமானதுதான். எனினும், இந்த ஹதீஸின் அடிப்படையில் நகைகளுக்கு ஜகாத் இல்லை என்று கூற முடியாது. ஏனெனில் குதிரை, அடிமை ஆகியவை அடிப்படையில் ஜகாத் வழங்க வேண்டிய இனத்தைச் சார்ந்ததல்ல. மாறாக வியாபாரத்திற்கு என்று ஆகும்போதுதான் அவை வியாபாரப் பொருளாகக் கருதப்பட்டு அவற்றின் மீது ஜகாத் கடமையாகிறது. வியாபார நோக்கமில்லாமல் ஒருவன் எவ்வளவு குதிரை வைத்திருந்தாலும் அடிமை வைத்திருந்தாலும் அதற்கு அவன் ஜகாத் வழங்க வேண்டும் என்று யாரும் கூறுவதில்லை. அது போன்றுதான் குடியிருக்கும் வீடும் உபயோகித்து வரும் ஆடைகளும் அடிப்படையில் ஜகாத் வழங்க வேண்டும் என்று கூறப்பட்ட இனத்தைச் சார்ந்தவை அல்ல.
மாறாக நகை என்பது அடிப்படையில் ஜகாத் வழங்க வேண்டும் என்று கூறப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி இனத்தைச் சார்ந்ததாகும். இந்நிலையில் ஜகாத் வழங்க வேண்டும் என்று கூறப்பட்ட இனத்தைச் சார்ந்த ஒரு குறிப்பிட்ட பொருளுக்கு மட்டும் (நகைக்கு) விதி விலக்கு அளிக்க வேண்டும் எனில் அதற்கு சரியான சான்றுகள் கூற வேண்டும். அவ்வாறு விலக்கு அளிக்க ஆதாரப்பூர்வமான எந்த ஒரு சான்றும் இருப்பதாக தெரியவில்லை. எனவே, இரண்டாவது நபி மொழியையும் ஆதாரமாகக் கொண்டு நகைகளுக்கு ஜகாத் இல்லை என்று கூற முடியாது.

முரண்பாடுகள்
"வளர்ச்சி அடையக்கூடிய அல்லது வளர்ச்சிக்குக் காரணமான பொருளில்தான் ஜகாத் கடமை. நகை இந்நிலையிலிருந்து மாறிவிட்டதால் ஜகாத் வழங்க வேண்டும் என்ற சட்டமும் மாறிவிட்டது" என்ற அவர்கள் கூறும் மூன்றாவது சான்றும் முரண்பாடுகள் நிறைந்த தவறான சான்றாகும். ஏனெனில் நகை வளர்ச்சிக்கு காரணமாக இல்லை என்று கூறுவது பொருத்தமற்ற வாதமாகும்.
தங்க நாணயங்கள் வழக்கில் இருந்த காலத்தில் எவ்வாறு அதனை வளர்ச்சிக்குரியதாக பயன்படுத்த முடிந்ததோ அதே போன்று இன்று நகைகளும் வளர்ச்சிக்குரியதாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சில நாடுகளில் நகைகளை வாடகைக்கு கொடுத்து அதன் மூலம் வருமானமும் பெறப்படுகிறது. (நபித் தோழர்கள் காலத்தில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு நகைகள் இரவலாகக் கொடுக்கப்பட்டு வந்தன. பிற்காலத்தில் அவை வாடகைக்கு கொடுக்கபடுவது நடை முறைக்கு வந்தது. இந்நடைமுறை இப்போதும் சில நாடுகளில் வழக்கில் உள்ளது.) இதன் அடிப்படையில் நகை வளர்ச்சிக்குரியதாக உள்ளதால் அதில் ஜகாத் வழங்க வேண்டும் என்றுதான் கூற வேண்டும். நகை வளர்ச்சிக்கு காரணமானதல்ல எனக் கருதி அவற்றிற்கு ஜகாத் இல்லை என்று கூறுவது அடிப்படையற்ற எந்த ஆதாரமும் இல்லாத கூற்றாகும்.
மேலும் நகைகள் வளர்ச்சிக்குக் காரணமானதல்ல என ஒரு வாதத்திற்காக ஏற்றுக் கொண்டாலும் கூட, வேறு பல சந்தேகங்களுக்கும் அது வழி வகுக்கிறது. அதாவது, உபயோகப்படுத்தாமல் கட்டியாக சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தங்கத்திலும், வெள்ளியிலும் வளர்ச்சி ஏற்படுவதில்லைதான். மேற்கண்ட காரணத்தின் அடிப்படையில் இவற்றிற்கும் ஜகாத் இல்லை என்றுதான் கூற வேண்டும். ஆனால் அவ்வாறு யாரும் கூறுவதில்லையே ஏன்?
அதே போன்று ஆண்கள் அணியும் நகைகள், தங்க வெள்ளிப் பாத்திரங்கள் (தங்கம் வெள்ளிப் பாத்திரங்கள் உபயோகிக்கத்தான் தடை தவிர, வைத்திருப்பதற்கு அல்ல.) இன்றைய நவீன காலத்தில் விளையாட்டு வீரர்கள் பெறும் விருதுகளான தங்கம் மற்றும் வெள்ளிக் கோப்பைகள், பதக்கங்கள் ஆகியவையும் வளர்ச்சிக்கு காரணமானதில்லைதான். இவற்றிலும் ஜகாத் இல்லை என்றே கூற வேண்டும். ஆனால், இவற்றிற்கு மட்டும் ஜகாத் உண்டு என இவர்கள் கூறிவருகிறார்கள். ஏன் இந்த முரண்பாடு?

மாற்றுக் கருத்துடைய நபித் தோழர்கள்
அன்னை ஆயிஷா, அஸ்மா பின்தா அபி பக்கர், ஜாபிர் பின் அப்துல்லாஹ், அப்துல்லாஹ் பின் உமர், அனஸ் (ரளியல்லாஹு அன்ஹும்) ஆகிய ஐந்து நபித் தோழர்களும் நகைக்கு ஜகாத் இல்லை எனக் கூறியுள்ளனர் என்பதையும் ஆதாரமாக ஏற்க இயலாது. ஏனெனில் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் போன்ற வேறுசில நபித் தோழர்கள் ஜகாத் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இவ்வாறு நபித் தோழர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்படும் போது ஒரு சாராரின் கூற்றை ஏற்றுக் கொண்டு மற்றொரு சாராரின் கூற்றை புறக்கணித்தால் அதற்கான சரியான காரணம் கூற வேண்டும். ஏற்கத்தக்க எந்தக் காரணமும் நிச்சயமாக அவர்களால் கூற இயலாது.
மேலும் நகைளுக்கு ஜகாத் இல்லை என இப்னு அப்பாஸ், அனஸ் (ரளியல்லாஹு அன்ஹும்) ஆகியோர் கூறியதாக அறிவிக்கப்பட்ட செய்தியும் உறுதியானதல்ல. காரணம் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நகைக்கு ஜகாத் உண்டு என்று கூறுவதாக இமாம் முன்திரி அவர்கள் தர்கீப் வதர்ஹீப் என்ற தனது நூலில் பதிவு செய்துள்ளார்.
அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு முறை ஜகாத் வழங்க வேண்டும் என்று கூறியதாக "அல் முஹல்லா", பைஹகி போன்ற பல்வேறு நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு முரண்பட்ட இரு கருத்துகள் இவ்விரு நபித்தோழர்கள் குறித்துக் கூறப்படுவதால்தான் இமாம் ஷாஃபி அவர்களும் அச்செய்தியில் சந்தேகம் அடைந்து, பின் வருமாறு கூறியுள்ளார்கள்.
قال الشافعي: ويروى عن ابن عباس وأنس بن مالك ولا أدري أثبت عنهما معنى قول هؤلاء ليس في الحلي زكاة (الأم)
"அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, அனஸ் ரளியல்லாஹு அன்ஹு ஆகியோர் ஜகாத் இல்லை என்று கூறுவதாக அறிவிக்கப்படுகிறது. ஆனால், அது உறுதியானதுதானா?" என்று நான் அறியேன் என கூறி உள்ளார்கள். (அல் உம்.)
நகைக்கு ஜகாத் இல்லை என்ற கூற வலுவான சான்றுகள் கிடைக்கவில்லை என்ற காரணத்தினால்தான், இராக்கில் இருந்த ஆரம்ப காலகட்டத்தில் நகைக்கு ஜகாத் இல்லை என்று கூறி வந்த இமாம் ஷாஃபி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் எகிப்து வந்த பின் அவ்வாறு கூறுவதை நிறுத்திக் கொண்டு,
قال الشافعي وقد قيل في الحلى صدقة وهذا ما أستخير الله عز وجل فيه (الأم)
"நகையில் ஜகாத் உண்டு என்று கூறப்படுகிறது. நான் இது விஷயத்தில் நல்ல தீர்வை தரவேண்டி அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன்." என்று கூறினார்கள். (அல் உம், தர்கீப் வ தர்ஹீப்)
ஆரம்ப காலத்தில் ஜகாத் இல்லை என்று கூறிக் கொண்டிருந்த இமாம் ஷாஃபி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் இறுதியில் அக்கருத்தை மாற்றிக் கொண்டார்கள் என்பதை "அல் உம்" என்ற அவரது நூலில் பல இடங்களில் வெளிப்படுத்தி உள்ளார்கள். நகைக்கு ஜகாத் இல்லை என்று கூற வலுவான சான்று இல்லை என்பதையே இது காட்டுகிறது. எனவே ஷாஃபி மத்ஹபை பின்பற்றுவதாக கருதுபவர்கள் இதனை கவனத்தில் கொண்டு நகைக்கு ஜகாத் வழங்க முன்வரவேண்டும். ஷாஃபி மத்ஹபின்படி நகைக்கு ஜகாத் இல்லை என்று கருதி ஜகாத் வழங்காமல் இமாம் ஷாஃபி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் மீது பழியைப் போட்டுவிட்டு (மறுமையில்) தப்பித்து விடலாம் என்று கருத வேண்டாம். மறுமை நாளில் யாரும் யாரின் மீதும் பழி சுமத்தி விட்டு இறைவனிடமிருந்து தப்பி விட முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
"இறைவனிடம் இஸ்திகார செய்து பிரார்த்தித்தப் பின் நகைக்கு ஜகாத் இல்லை என இமாம் ஷாஃபி அவர்கள் கூறியதாக அவரது மாணவர் ரபீஃ பின் சுலைமான் அவர்கள் "உம்" என்ற நூலில் பதிவு செய்துள்ளார். இந்த செய்தி சரி என ஏற்றுக் கொண்டாலும், இமாம் ஷாஃபி அவர்களின் இந்தத் தீர்வு ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல. ஏதேனும் ஆதாரம் கிடைத்திருக்குமேயானால், அதனைக் கூறியிருப்பார்கள். மேலும், இறைவனிடம் இஸ்திகார செய்து விட்டு கூறப்படும் செய்திகளை சான்றாக ஏற்க முனைந்தால், "ஒவ்வொருவரும் நான் இஸ்திகார செய்தேன். இதுவே தீர்வு" என்று கூறிக் கொண்டு பல்வேறு புதிய சட்டங்களைக் கூற முனைவார்கள். அப்போதும் அதனை மறுக்க இயலாது.
அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் சொல்லும், செயலும்
தன்னிடம் வளர்ந்த அனாதைகளின் நகைகளுக்கு ஜகாத் வழங்க வில்லை என்று அன்னை ஆயிஷா அவர்கள் குறித்து கூறப்பட்டுள்ளது போன்றே, அவர்கள் நகைகளுக்கு ஜகாத் வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
حدثنا محمد بن إسماعيل (بن إسحاق) الفارسي ثنا يحيى بن (جعفر بن الزبرقان) أبي طالب ثنا عبد الوهاب (بن عطاء الخفاف) أنا الحسين (بن ذكوان) المعلم عن عمرو بن شعيب عن عروة عن عائشة قالت لا بأس بلبس الحلي إذا أعطي زكاته رواه الدارقطني والبيهقي
"நகைகளுக்கு ஜகாத் வழங்கி விட்டால் அதனை அணிந்து கொள்வதில் குற்றமில்லை" என அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: உர்வத் பின் ஜுபைர், நூல்: தாரகுத்ணி, பைஹகி)
இதன் அறிவிப்பாளர்களில் சிலர் குறித்து குறை கூறப்பட்டிருந்தாலும், அக்குறை, இந்த செய்தியை புறக்கணிக்கின்ற அளவுக்கு இல்லை. ஏனெனில் குறை கூறப்பட்டவர்கள் புஹாரி, முஸ்லிம் உட்பட ஸிஹாஹு ஸித்தா எனப்படும் ஆறு நூற்களில் இடம் பெற்றவர்கள். எனவே இச்செய்தி ஏற்கத்தக்கதே.
அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் குறித்து இவ்வாறு முரணான இரு வேறு கருத்துக்கள் கூறப்படுகிறது. இவ்விரு செய்தியும் ஆதாரப்பூர்வமானதுதான் என்பதிலும் சந்தேகமில்லை. இவ்வாறு ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் குறித்து இருவிதமாக அறிவிக்கப்படுவதால் ஜகாத் வழங்கவில்லை என்ற செய்தியை மட்டும் ஆதாரமாக எடுத்துக் கொள்வது என்ன நியாயம்?
மேலும் ஒருவரின் கூற்று அவரது செயலுக்கு முரண்பாடாக இருக்குமேயானால் செயலைவிட அவர் கூற்றுக்குத்தான் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற ஹதீஸ் கலையின் அடிப்படை விதியின் படியும், ஜகாத் உண்டு என்ற அன்னை ஆயிஷாவின் கூற்று குர்ஆன், மற்றும் வேறு நபி மொழிகளுக்கு ஒத்து இருப்பதாலும் அவர்களின் செயலைவிட அவர்களின் கூற்றையே முற்படுத்த வேண்டும். எனவே, ஜகாத் வழங்க வில்லை என்ற அவர்களது செயலை ஆதாரமாகக் கருதுவது கூடாது.

நகையின் அளவினைத் தீர்மானிப்பதிலும் குழப்பம்
நகைக்கு ஜகாத் இல்லை என்போர் வேறொரு குழப்பத்திலும் உள்ளனர். அதாவது, நகைக்கு ஜகாத் இல்லை என்றால் எவ்வளவு இருந்தாலும் ஜகாத் இல்லை என்றுதான் கூற வேண்டும். ஆனால், அதிகமாக நகை வைத்திருப்போர் மட்டும் ஜகாத் வழங்க வேண்டும் என்று கூறுகின்றனர். அந்த "அதிக அளவு" எவ்வளவு என்பதை அவர்களால் அறுதியிட்டுக் கூற முடியவில்லை. அதே சமயத்தில் எவ்வளவு இருந்தாலும் ஜகாத் இல்லை என்றும் அவர்களால் கூற இயலவில்லை. அவ்வாறு கூறினால் ஏமாற்ற நினைப்போருக்கு அது சாதமாக அமைந்து விடும்.
எனவே நகைகளுக்கு ஜகாத் இல்லை என்றால், அதிகமான நகை வைத்திருப்போர் மட்டும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று பொதுவாகக் கூறுவது எந்த விதத்தில் நியாயமாகும்? அவ்வாறு கூறுவதற்கு என்ன சான்று? மேலும், "இது அதிகமானது", "இது குறைவானது" என்று எதனை அளவுகோலாகக் கொண்டு தீர்மானிப்பது? அனைவருக்கும் பொருந்தி வரக்கூடிய பொதுவான அளவினை கூறமுடியாது போய் இறுதியில் வேறொரு சட்டச்சிக்கலுக்குத்தான் இது வழி வகுக்கும்.
அணியும் நகைகள் எனும் போது, அணிந்திருக்க வேண்டிய கால அளவு எவ்வளவு என்பதை ஜகாத் இல்லை என்போரால் தெளிவு படுத்தப்படாமல் அவற்றிலும் கருத்து வேறுபாடு நிலவுகிறது. அதாவது, ஜகாத் இல்லை என்பது எப்போதும் அணிந்து கொண்டிருக்கும் நகைகளுக்கு மட்டுமா? அல்லது எப்போதாவது ஒரு முறை அணிந்திருந்தாலும் போதும் என்ற நிலையில் உள்ள எல்லா நகைகளுக்குமா?. இதற்கும் தெளிவான விளக்கம் இல்லை.

அதிகம் நகை வைத்திருப்போர் எவ்வாறு அதற்கு ஜகாத் வழங்க வேண்டும்?
அதிக நகை வைத்திருப்போர் ஜகாத் வழங்க வேண்டும் என்று கூறுவோர் அதை எந்த முறையில் வழங்க வேண்டும் என்பதிலும் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர். அதாவது அதிகம் நகை வைத்திருப்போர் அதனை இரவல் கொடுக்க வேண்டும் என்றும் அதுவே அதற்கான ஜகாத் என ஜாபிர் (ரலி) அவர்கள் கூறுகின்றனர். அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் இவ்வாறு கூறுவதாக பைஹகியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
عن عبد الملك عن أبي الزبير عن جابر رضي الله عنه قال: ((لا زكاة في الحلي)) قلت: إنه يكون فيه ألف دينارزقال: يعار, ويلبس. رواه الشافعي والبيهقي
அபூ ஜுபைர் அறிவிக்கிறார்கள்: "நகைக்கு ஜகாத் இல்லை என்று ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறிய போது ஆயிரம் தீனார் அளவு இருந்தாலுமா? என்று நான் கேட்டேன். அதற்கவர்கள் இரவல் கொடுத்து விட்டு அணிந்துக் கொள்ள வேண்டும்" என்றார்கள். (நூல்: முஸ்னத் ஷாஃபி, பைஹகி.
عن سفيان عن عمرو بن دينار قال سمعت رجلا يسأل جابر بن عبد الله عن الحلي أفيه زكاة؟ فقال جابر: لا. فقال: وإن كان يبلغ ألف دينار؟ فقال جابر: كثير. رواه البيهقي والشافعي
ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ஒரு மனிதர் வந்து "நகைக்கு ஜகாத் உண்டா?" என்று வினவிய போது "இல்லை" என்று பதிலுரைத்தார்கள். "ஆயிரம் தீனார் அளவு இருந்தாலுமா?" என்று அவர் மீண்டும் வினவிய போது "அது அதிகமான அளவு" என்றார்கள். (அறிவிப்பாளர்: அம்ர் பின் தீனார். நூல்: முஸ்னத் ஷாஃபி, பைஹகி)
(ஜகாத் என்பதற்கு "இரவல் கொடுப்பது" என்ற புதிய விளக்கம் குர்ஆன் மற்றும் நபி மொழியிலிருந்து பெறப்பட்ட விளக்கமல்ல என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.)
"மற்ற பொருட்களுக்கு இரண்டரை சதவீதம் ஜகாத் வழங்கி வருவது போன்றே இந்த அதிக நகைகளுக்கும் இரண்டரை சதவீதம் வழங்க வேண்டும்" என்று வேறு சிலர் கூறுகின்றனர். இரவல் கொடுப்பதற்காகவும், அணிவதற்காகவும் வைத்துள்ள நகைகளுக்கு ஆயுளில் ஒரு முறை ஜகாத் கொடுக்க வேண்டும் என்று அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாக பைஹகியிலும் "அல் முஹல்லா" என்ற நூலிலும் பதிவாகியுள்ளது.
இவ்வாறு நகைகளுக்கு ஜகாத் இல்லை என்போர் பல்வேறு குழப்பத்தில் உள்ளதாலும், நகைகளுக்கு ஜகாத் இல்லை என்று குர்ஆனிலும், நபி மொழியிலும் தெளிவாகவோ அல்லது மறை முகமாகவோ கூறப்படாத நிலையிலும் ஜகாத் இல்லை என்ற வாதம் அடிப்படையிலேயே தவறானதாகும் என்பது இதன் மூலமும் உறுதியாகின்றது.
இதன் காரணமாகவே, நகைகளுக்கு ஜகாத் இல்லை என்போரில் பெரும்பான்மையோர், பேணுதலின் அடிப்படையில் ஜகாத் வழங்கி விடுவதே சிறந்தது என்று கூறுகின்றனர். இதனை கதாபி என்பவர் மஆலிமுஸ் ஸுனன் என்ற நூலில் உறுதி செய்கிறார். இன்றைய இஸ்லாமியப் பொருளாதார மற்றும் மார்க்க அறிஞர்களும் இதனைத்தான் உறுதி செய்கின்றனர்.
நகைக்கு ஜகாத் இல்லை என்ற வாதத்திற்கு குர்ஆனிலும், நபி மொழியிலும் சான்றுகள் இருக்குமேயானால், அந்த சான்றுகளின் அடிப்படையில் ஜகாத் கொடுக்காமல் இருப்பதுதான் சரியானதும், பேணுதலானதுமாகும். குர்ஆனுக்கும், ஹதீஸிற்கும் மாற்றமாக செயல்படுவது பேணுதலானது என ஒருபோதும் கூற முடியாது. மாறாக, அது அதிகப் பிரசிங்கித்தனமானது என்றுதான் கூறப்படும். எனவே, பேணுதலின் அடிப்படையில் ஜகாத் வழங்குவது சிறந்தது என்ற இவர்களின் கூற்றிலிருந்தே இவர்கள் எடுத்து வைக்கும் ஆதாரங்களில் உள்ள பலவீனங்கள் தெளிவாகவே தெரிகிறது. எனவே, ஜகாத் இல்லை எனக் கூறுவதற்கு சான்றுகள் இல்லை என்ற நம் கருத்து மேலும் வலுவடைகிறது.

பெண்களின் அடிப்படையான அவசியப் பொருளே ஆபரணங்கள்
(أَوَمَنْ يُنَشَّأُ فِي الْحِلْيَةِ وَهُوَ فِي الْخِصَامِ غَيْرُ مُبِينٍ) (الزخرف:18)
''அலங்காரத்தில் வளர்க்கப்படும், தன் வழக்கைத் தெளிவாக எடுத்துரைக்க முடியாதவற்றையா?'' (பெண்களையா அவர்கள் இறைவனுக்கு இணையாகத் கருதுகிறார்கள்.) (அல் குர்ஆன்: 43:18)
நகைக்கு ஜகாத் இல்லை என்போர் இவ்வசனத்தை துணைச் சான்றாக கருதுகிறார்கள். முதலில் இந்த வசனத்தின் கருத்தை புரிந்து கொள்வோம். அதன் பிறகு, இந்த வசனத்தை எவ்வாறு சான்றாக கருதுகிறார்கள் என்பதை அறிவோம்.

வானவர்களை இறைவனின் பெண் மக்களாகக் கருதி அவர்களை இறை மறுப்பாளர்கள் வழிபட்டு வந்தார்கள். அதனை இடித்துரைக்கும் முகமாக இவ்வசனத்தை இறைவன் இறக்கினான். அதாவது அலங்காரத்தில் வளர்ந்து வரும், தன் தேவைகளை சுயமாக நிறைவேற்றிக் கொள்ள இயலாத, தன் வழக்குகளை தெளிவாக எடுத்துரைக்க முடியாத பலவீனமுள்ள பெண்களையா இறைவனுக்கு இணையாகக் கருதுகிறார்கள்? என்பதே இந்த வசனத்தின் கருத்தாகும்.
அலங்காரம் இல்லாப் பெண்கள் குறையுள்ளவர்கள் என்பதை இறைவன் இந்த வசனத்தில் தெளிவு படுத்துகிறான். இதன் மூலம் அலங்காரம் என்பது பெண்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று என்பதை புரிந்து கொள்ளலாம். அந்த அலங்காரத்தின் ஒரு அம்சம்தான் நகை. எனவே, மனிதனின் அடிப்படைத் தேவையான வாகனம், பணியாளன், வீடு, விலை உயர்ந்த ஆடைகளுக்கு ஜகாத் இல்லாதது போலவே பெண்களின் நகைகளுக்கும் ஜகாத் இல்லை.
இவ்வாறு இந்த வசனத்திற்கு விளக்கம் அளித்து, அதனைச் சான்றாகக் கருதுகிறார்கள்.

இந்த விளக்கமும் அதன் அடிப்படையில் எடுத்து வைக்கின்ற கருத்தும் ஒரு போதும் சான்றாக அமையாது. ஏனெனில், பெண்களின் அலங்காரத்திற்கு அவசியப் பொருள்தான் நகை என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லைதான். அதனால்தான், ஆண்களுக்குத் தடை செய்யப்பட்ட ஆபரணங்கள் பெண்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது. அவசியப் பொருள் என்பதால், அது எவ்வளவு இருந்தாலும் அதற்கு ஜகாத்தே இல்லை என்ற முடிவுக்கு வர முடியுமா? என்றால் அதற்கு எந்த ஒரு முன் மாதிரியும் இல்லை.
ஒரு பெண்ணின் அலங்காரத்திற்கு நகை அவசியமாக இருப்பதை விட, மனிதன் உயிர் வாழ்வதற்குத் தேவையான உணவுப் பொருள் பன்மடங்கு அவசியமானதாகும். உணவின்றி மனிதன் உயிர் வாழவே முடியாது. அதனால், விளைபொருளில் ஜகாத் இல்லை என்ற முடிவுக்குதான் வர முடியுமா? தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களும் மனிதனின் அவசியப் பொருட்கள்தான். அவற்றிலும் ஜகாத் இல்லை என்று முடிவு செய்ய முடியுமா?
மனிதனுக்குத் தேவைப்படும் அவசியப் பொருட்கள் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் இருக்கும் போதுதான் அவற்றில் ஜகாத் வழங்க வேண்டும். நகையைப் பொருத்தவரை அக்குறிப்பிட்ட அளவு என்பது 11 பவுனாகும்.

இது ஒரு பெண்ணை அலங்கரிக்க போதுமான அளவும்கூட. அதற்கு மேல் நகை வைத்திருப்பவர்கள்தான் அவற்றிற்கு ஜகாத் வழங்க வேண்டும் என்று இஸ்லாம் கூறியுள்ளது. எனவே, "நகை பெண்களின் அவசியப் பொருள். அவற்றிற்கு ஜகாத்தே இல்லை" என வாதிப்பது பொருத்தமற்றதாகும்.
இவற்றுக்கெல்லாம் மேலாக, "நகைகளுக்கு ஜகாத் இல்லை" என்பது குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவல்ல என்பதை நாம் ஆரம்பத்திலேயே தெளிவாகவே உறுதிப்படுத்தியுள்ளோம்.

மவ்லவி, ஹாஃபிள், நூர் முஹம்மது ஃபாஜில் பாகவி
தபால் பெட்டி எண்: 204, தாயிஃப், சவுதி அரேபியா
செல்போன்: 050-9746919
மின்னஞ்சல்:

ஜகாத் ஏழைகளின் பங்கு..

உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன். அல்குர்ஆன் 67:2

வல்லோனாகிய ஏக இறைவன் இவ்வுலக வாழ்க்கையை ஒரு பரிட்சை வாழ்க்கை என்று அல்குர்ஆனில் தெளிவு படுத்தியுள்ளான். எனவே இவ்வுலக வாழ்க்கையில் ஏழை, பணக்காரன், தொழிலாளி, முதலாளி, அதிகாரம் வகிப்பவன் அதற்குக் கட்டுப்படுபவன் போன்ற ஏற்றத்தாழ்வுகளுடன் நடமாட விட்டிருப்பது சோதனையின் காரணமாகவே. இவ்வுலகம் இயங்கி சோதனையான பரிட்சை முடிவடைய வேண்டுமென்றால் இத்தகைய ஏற்றத் தாழ்வுகள் அவசியம் என்பதை அறிஞர்கள் மறுக்க மாட்டார்கள்.
கணக்கில் அடங்காத மறு உலக வாழ்க்கையோடு விரல் விட்டு எண்ணும் ஆண்டுகளை கொண்டதுதான் இவ்வுலக வாழ்க்கை. மிக அற்பமானதொரு வாழ்க்கையை அறியும் உண்மை அறிஞர்களே இந்த உண்மையை ஏற்கமுடியும். தினசரி கோடிக்கணக்கான ரூபாய்களுடன் புழங்கும் ஒருவனே சில சில்லறை நோட்டுகளை புறக்கணிக்கத்தக்க நிலையை உணரமுடியும். அன்றாடம் சில சில்லறை காசுகளை மட்டும் பார்த்து வருபவனுக்கு அதுவே பெரும் சொத்தாகத் தெரியும்.
இதே போல் நித்தியமான கணக்கிலடங்காத மறு உலக வாழ்க்கையில் உறுதியான நம்பிக்கை உடையவர்களுக்கே இவ்வுலகின் வாழ்க்கையின் அற்பம் புரியும். மறு உலக வாழ்க்கையில் நம்பிக்கை இல்லாதவர்கள் அழிந்து போகும் அற்ப இவ்வுலக வாழ்க்கையைவிட பெரியதொரு நிரந்தர வாழ்க்கை இருப்பதை ஏற்க முடியாதுதான். அவர்களுக்கு இவ்வுலகமே சர்வமும்.

தாயின் சின்னஞ்சிறிய கருவறையில் குழந்தை இருக்கும்போது, அங்கிருந்து ஒரு பிரமாண்டமான உலகறைக்குப் போக இருக்கிறோம் என்பதை எப்படி நம்ப முடியாமல் இருக்கிறதோ அதேபோல், இந்த உலகறையை விட்டும் அதைவிட பன்மடங்கு பிரமாண்டமான மறு உலகறைக்குப்போக இருப்பதையும் மனிதன் நம்பாமல் இருக்கிறான். ஆனால் கருவறையிலிருந்து இவ்வுலகறைக்கு மனிதன் வந்தது பெரிய உண்மையோ சர்வ நிச்சயமோ, அதேபோல் மனிதன் இவ்வுலகறையிலிருந்து மறு உலகறைக்கு செல்வதும் மிகப்பெரிய உண்மையாகும். சர்வ நிச்சயமாகும்.
இவ்வுலகின் ஆசாபாசங்களுக்கும், சொத்து சுகங்களுக்கும், பணம் காசுக்கும் அடிமைப்பட்டுக் கிடப்பவன், மறுமையின் அழியாத நித்தியமான பதவிகளையும், சுகங்களையும் அறியாதவனாகத்தான் இருப்பான். அந்த அளவுக்கு அவனது அக, புற கண்கள் குருடாகத்தான் இருக்கும். எனவே அவனிடமே கஞ்சத்தனமும், புறக்கணிக்க வேண்டிய அற்ப்பத்தனம் காணப்படும்.

மறுமையின் நிரந்த வாழ்க்கையை உண்மையில் அறிந்து வைத்திருப்பவன், அவ்வுலகில் தனக்கு அல்லாஹ்வால் கொடுக்கப்பட்டிருக்கும் சொத்து சுகங்களும், செல்வங்களும் சோதனைக்காகத்தான் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஏழை எளியவர்களின் மற்றும் தேவையுடையோரின் பங்கும் இருக்கிறது. அவற்றை முறைப்படி கணக்கிட்டு உரியர்வகளிடம் ஒப்படைத்து விடவேண்டும். அப்படி ஒப்படைக்கத் தவறினால் அவன் நிலை கேடாகவே முடியும் என்பதை உணர்ந்து கொள்வான்.

இவ்வுலக சொத்து சுகங்களை பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்காமல் கஞ்சதனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றை பிரிவது மட்டுமல்ல; அவற்றை உரியவர்களுக்கு கொடுக்காமல் கட்டிக் காத்துக் கிடந்ததற்குரிய தண்டனையை இனிமேல் தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்பட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நேரில் கண்கூடாக கண்டபின்னர்தான் அழுது புழம்பப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.

ஏழை, எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும், வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள சொத்திலிருந்து ஏழை, எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களின் பங்கை முறைப்படி செலுத்துவதன் அவசியம் பற்றியும், அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ்வரும் குர்ஆன் வசனங்களைப் பார்த்து உணர்வு பெற வேண்டியது ஒவ்வொரு ஆண் பெண்மீது கடமையாகும். ஜகாத் கட்டாயம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தும் வசனங்கள் சில 2:43,83110,177,277, 4:77,162, 5:12,55, 7:156, 9:5

இன்னும் எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக!. அல்குர்ஆன் 9:34

(நபியே! அவர்களுக்கு நீர் அந்த நாளை நினைவூட்டுவீராக!) அந்த நாளில் (அவர்கள் சேமித்து வைத்த செல்வத்தை) நரக நெருப்பிலிட்டுக் காய்ச்சி, அதைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும் விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும் (இன்னும்) ”இது தான் நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்தது ஆகவே நீங்கள் சேமித்து வைத்ததைச் சுவைத்துப் பாருங்கள்” (என்று கூறப்படும்). அல்குர்ஆன் 9:35

ஆகிய இரு கடுமையான இரு எச்சரிக்கைகளையும், முஸ்லிம்கள் தங்கள் நெஞ்சில் நிறுத்தி இந்தக் கொடுமையான தண்டனையிலிருந்து விடுபட தங்கள் சொத்துக்களில் ஜகாத்தை கணக்கிட்டு எளியவர்களுக்கும் தேவையுடைவர்களுக்கும் கொடுத்துவிடக் கடமைப் பட்டிருக்கிறார்கள். எனவே அன்புச் சகோதர சகோதரிகளே! அல்லாஹ் உங்களுக்கு அளித்துள்ள செல்வங்களிலிருந்து ஏழைகளுக்குறிய பங்கை முறையாக கணக்கிட்டு அவர்களிடம் ஒப்படைத்து விடுபவர்களே நாளை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து தப்ப முடியும் என்பதை உணர்வார்களாக!