பெண்கள் நாடி ஓடும் அழகும்! தேடி வரும் ஆபத்தும்!




[ 'அழகென்றால் பெண். பெண் என்றால் அழகு' என்று எண்ணும் அளவுக்குத் தகவல் தொழில் நுட்பத்துடன் அழகுக் கலை போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது. அழகின் பரிணாம வளர்ச்சி மிக வேகமாக முன்னேறிவரும் அதே நேரம், பெண்கள் தங்கள் அழகைக் காட்டித்தான் பிறருடைய கவனத்தை ஈர்க்க வேண்டுமென்ற காலம் கரைந்துவிட்டது.
அழகின் மீது அதீத மோகம் ஏற்படும்போது, விளம்பரங்கள் மிகைப்படுத்தும் அழகுக்காக இறைவன் அன்பளித்துள்ள இயற்கை உடலமைப்பை, உருவ அமைப்பை செயற்கை முறைக்கு மாற்றும்போதே பலவித பாதிப்புகளும் ஆரோக்கியக் கேடுகளும்" ஏற்படுகின்றன. இயற்கையை விட்டு விலகி செயற்கைப் பொருட்களின் அருகாமையை அதிகப்படுத்திக் கொள்ளும் ஒவ்வொரு செயலும் உடலின் இயல்புக்கு ஊறுவிளைவிக்கக் கூடுமென்பதில் ஐயமில்லை.

முகப்பொலிவையும் அழகினையும் ஏற்படுத்தும் வகையில் பயன்படுத்தப்படும் இராசாயனம் கலந்த கிரீம் வகைகளால் அளவுக்கு மீறி இளமையையும் அழகினையும் எதிர்பார்த்து முகச்சிதவையும் முதுமைத் தன்மையையும் ஏற்படுவதை முன்கூட்டியே சிந்தித்துச் செயற்பட வேண்டும்.]
அழகு! இது பல விஷயங்களில் வியாபித்திருந்தாலும் இன்றைய நாகரீகத்தில், இன்றைய யுகத்தில் மிக வேகமாக ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் அழகு சாதனப் பொருட்களை வியப்புடன் நோக்குமிடத்து அழகின் நூற்றாண்டோ என்று எண்ணும் அளவுக்கு பெண்களின் உருவ அமைப்பு மெருகேற்றப்பட்டு முலாம் பூசப்படுகின்றது.
அழகென்றால் பெண். பெண் என்றால் அழகு என்று எண்ணும் அளவுக்குத் தகவல் தொழில் நுட்பத்துடன் அழகுக் கலை போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது. அழகின் பரிணாம வளர்ச்சி மிக வேகமாக முன்னேறிவரும் அதே நேரம், பெண்கள் தங்கள் அழகைக் காட்டித்தான் பிறருடைய கவனத்தை ஈர்க்க வேண்டுமென்ற காலம் கரைந்துவிட்டது. தங்கள் அறிவு, திறமை, ஆளுமை போன்றவற்றினால் இன்றைய சமுதாயத்தில் புகழையும் அங்கீகாரத்தையும் மிக எளிதில் பெற்று விடுகின்றனர் என்பது மறுக்கமுடியாத உண்மை. என்றாலும் இன்றைய (மணமுடித்த, மணம் முடிக்காத) பெண்கள் அழகான உடலமைப்பு வேண்டும். வசீகரிக்கும் முகம் வேண்டும். என்ற எண்ணத்துடன் பல உத்திகளை நாடுவதும் தரமற்ற அழகு நிலையங்களை நாடி ஓடுவதும் தரமற்ற அழகுப் பொருட்களுக்குப் பணத்தல்த் திசை திருப்புவதும் சற்றுக் கவலைக்குரிய விஷயமாகும்..
தகுதி, தரம் பாராமல் கவர்ச்சியான முக அமைப்புக்கும் உடலமைப்புக்கும் பணத்தையும் வீண்விரயமாக்கிப் பல பக்க விளைவுகளைக் காசு கொடுத்து வாங்குகின்றனர். பெரும்பாலான இன்றைய பெண்கள் அழகு சாதனப் பொருட்களை நம்பி தனது வயதையும் வாழ்க்கையையும் அலுவல்களையும் அடகு வைப்பது தனது இயல்பின் மீதான நம்பிக்கையின்மையை வெளிக்காட்டுவதாகவே கருதலாம் உளவியல் ரீதியாக நோக்கும் இடத்து தன்னம்பிக்கைக் குறைவின் வெளிப்பாடாகவும் தாழ்வு மனப்பான்மை அடித்தளமாகவும் அமையும் அதேவேளை, ஆரோக்கியத்துக்கு மிக ஆபத்தாகவும் அமைந்துவிடுகிறது.
உண்மையிலேயே அழகுசாதனப் பொருட்கள் அழகைக் கூட்டுகின்றனவா என்பதனை ஆராய்ந்தால் பல அதிர்ச்சியான தகவல்கள் கிடைக்கின்றன. ஊடகங்கள் மூலம் விளம்பரப்படுத்தப்படும் பெரும்பாலான அழகு சாதனப் பொருட்கள் அழகையும் வனப்பையும் ஆரோக்கியத்தையும் பாதிக்கின்றன. அத்துடன் அழகு சாதனப் பொருட்களில் கலந்துள்ள வேதியல் பொருட்கள் பல பக்க விளைவுகளையும் ஏற்படுத்துகின்றன. இந்த வேதியல் பொருட்கள் ஒவ்வாமை முதல் புற்று நோய் வரையிலான பல்வேறு விதமான நோய்களைத் தோற்றுவிக்கின்றது. அதிகம் ஏன் பெண்மையைக் கூட வலுவிழக்கச் செய்கின்றன.
அழகு சாதனப் பெருட்களால் தலைவலி வாந்தி, ஏன் மன அழுத்தங்கள் கூட ஏற்பட வாய்ப்பு உண்டு என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். தாய்மை அடைந்த பெண்கள் அழகு சாதனப் பொருட்களைப் பாவிப்பது நல்லதல்ல என்பதுதான் ஆராய்ச்சியாளர்களின் திட்டவட்ட முடிவு.
ஒரு தாயின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு 812 வாரங்கள் வரையிலான தாய்மைக்காலத்தில் இனப்பெருக்கம் ஏற்படுகின்றது. அப்போது சில ஹோமோன்கள் தாயின் உடலில் தூண்டப்பட்டு அந்தக் குழந்தையின் இனப்பெருக்க உறுப்புக்கான அடித்தளத்தை அமைக்கின்றது. அந்தக் காலகட்டத்தில் அந்தக் கருவுற்ற தாய் பயன்படுத்தும் தரமற்ற அழகுசாதனப் பொருட்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான ஹோமோன் தூண்டலை தடைசெய்து விடுகின்றது. இதனால் அந்தத் தாயின் வயிற்றில் உருவாகும் குழந்தையின் இனப்பெருக்க உறுப்பு பாதிக்கப்படுகின்றது. இதன் காரணமாக அந்தக் குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும்போதே மலட்டுத்தன்மை அடையும் வாய்ப்புகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை செய்கின்றனர்.
இதற்கு ஒரே தீர்வு கர்ப்பிணிப் பெண்கள் அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்தாமல் இருப்பதுதான் நல்லது என்கிறார் ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான ரிச்சர்ட் ஷார்ப். அழகு சாதனப் பொருட்கள் இந்தப் பாதிப்பை ஏற்படுத்த என்ன காரணம் என்று கூறுகையில், அவற்றில் உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய இரசாயனக் கலவைகள் அதிகமாகச் சேர்க்கப்படுவதாகக் கூறுகிறார். இந்த இரசாயனம் ஒருவருக்கு புற்று நோயை ஏற்படுத்தவல்லது என்று எச்சரிக்கிறார்.
நம்முடைய சருமத்தில் (தரமற்ற, மலிவான) அழகு சாதனப் பொருட்கள் பூசப்படுவதால்
அது நம்மைப் பாதிக்காது என்றே பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால, உண்மையில் அந்த அழகு சாதனப் பொருட்களில் உள்ள இராசாயனம் தோலில் ஊடுருவிச் சென்று பாதிப்பை உண்டாக்கிறது.
மலிவு விலையில் தரக்கட்டுபபாடற்ற எந்த அழகு சாதனப் பொருட்களும் மலிவாகக் கிடைகக்கிறது என்பதற்காக தரநிர்ணய நற்சான்றிதழ் இல்லாத அந்த அழகு சாதனப் பொருட்களை நாடுவதால் பாரிய பின் விளைவுகளுக்கு முகம்கொடுக்க நேரிடும். நாம் மேலும் சில விடயங்களை இது தொடர்பில் ஆராயலாம்.
முகப்பொலிவையும் அழகினையும் ஏற்படுத்தும் வகையில் பயன்படுத்தப்படும் இராசாயனம் கலந்த கிரீம் வகைகளால் அளவுக்கு மீறி இளமையையும் அழகினையும் எதிர்பார்த்து முகச்சிதவையும் முதுமைத் தன்மையையும் ஏற்படுவதை முன்கூட்டியே சிந்தித்துச் செயற்பட வேண்டும்.
முக வசீகரத்தின் உதட்டு அழகுக்காகத் தொடர்ந்து உதட்டுச் சாயம் (லிப்ஸ்டிக்) போடும் பழக்கம் கொண்ட ஒரு பெண், தன்வாழ்நாளில் சுமார் நாலரைக் கிலோ எடை அளவுக்கு லிப்ஸ்டிக்கைத் தன்னை அறியாமலேயே உட்கொள்கிறாள் எனவும் இது மனச்சிதைவு, கருச்சிதைவு, சிறுநீரகக் கோளாறு, பெண்மைத்தன்மை இழப்பு உட்படப் பல்வேறு சிக்கல்"களை உருவாக்கக் கூடுமெனவும் அமெரிக்க ஆராய்ச்சியாளர் பீட்டர் டிங்கில் தெரிவிக்கிறார்.
மேலும், வாசனைத் திரவியங்களிலும் உடலில் தெளித்துக் கொள்ளும் பாடி ஸ்பிரேக்களிலும் 'பாரபீன்ஸ்' (parabens மற்றும் பாத்தலேட்ஸ் (phthalates) போன்ற அமிலங்கள் கலந்திருப்பதால் இவை காற்றில் கலந்து உடலுக்குள் புகுந்து ஊறு விளைவிக்கக் கூடியவை. மேலும் மார்பகப் புற்று நோய் ஏற்படக் கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்துகிறார்கள். கூந்தல் ஸ்பிரேயைப் பயன்படுத்துவதால் திசொரொஸின் என்ற நுரை ஈரல் நோய் ஏற்படவும் வாய்ப்புண்டு.
மேலும் சில பொடுகு எதிர்ப்புச் ஷாம்பு மூலம் கிட்னி, ஈரல்,வயிறு மற்றும் இதர உறுப்புகளில் கோளாறு ஏற்படுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். விதவிதமான நகப் பாலிஷ் (டியூடெக்ஸ்) நகத்துக்கு அடியில் இரத்தக் கசிவை ஏற்படுத்துகின்றனவாம். மேலும் சில மஸ்கராவில் போதைப் பொருட்கள் கலக்கப்படுவதால் கண் எரிச்சல், கண் சிகப்பாகுதல் போன்றன ஏற்படுகின்றன.
இன்றைய இளம் பெண்களிடையே கூந்தலை நேராக்க வேண்டும் என்ற மோகம் மிகுந்து வருகின்றது. இந்த முறைக்காகப் பயன்படுத்தப்படும் பொருட்களில் 'பார்மால்டிஹைட்' எனப்படும் இராசாயனம் அளவுக்கு அதிகமாகவே கலந்துள்ளது. இது புற்று நோயை ஏற்படுத்தும் வாய்ப்பை அதிகரிக்கும் என உலக நல்வாழ்வு நிறுவனம் எச்சரித்துள்ளது.
அளவுக்கு மீறி அழகை நேசிக்கும்போது உடல் எடையும் கவனத்தில் கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக விளம்பரங்கள் மிகைப்படுத்தும் "டயட்' முறைகளைப் பின்பற்றுகின்றனர். உதாரணமாக அமெரிக்கர்கள் ஆண்டுக்குச் சுமார் 35 மில்லியன் டாலர்களை இத்தகைய எடை குறைப்பு (ஸ்லிம்) பொருட்களுக்குச் செலவிடுகின்றனர் என்கிறது ஒரு புள்ளி விபரம். இத்தகைய மோகம் ஏற்படும்போது உயிரிழப்பும் ஏற்படுகின்றது. சமீபத்தில் மாஸ்கோவில் 35 வயதான பெண்ணொருவர் அளவுக்கு அதிகமாக உடலை இளைக்க வைக்கும் மருந்துகளை உட்கொண்டதால் மரணமடைந்துள்ளார். இதனை ஒரு உதாரணமாக நாம் எடுத்துக் கொள்ளலாம்.
அழகின் மீது அதீத மோகம் ஏற்படும்போது, விளம்பரங்கள் மிகைப்படுத்தும் அழகுக்காக இறைவன் அன்பளித்துள்ள இயற்கை உடலமைப்பை, உருவ அமைப்பை செயற்கை முறைக்கு மாற்றும்போதே பல வித பாதிப்புகளும் ஆரோக்கியக் கேடுகளும்" ஏற்படுகின்றன. இயற்கையை விட்டு விலகி செயற்கைப் பொருட்களின் அருகாமையை அதிகப்படுத்திக் கொள்ளும் ஒவ்வொரு செயலும் உடலின் இயல்புக்கு ஊறுவிளைவிக்கக் கூடுமென்பதில் ஐயமில்லை.
"அழகு என்பது உருவம் சம்பந்தப்பட்டதல்ல. மனது சம்பந்தப்பட்டது' என்பதே சிலரின் வாதம். இதுவே உண்மையான கூற்று. மனதின் அழகே முகத்தின் பொலிவு. பெண்கள் போலி உருமாற்றங்களை நம்பி நாடி ஓடாமல் தன்னில் இருக்கும் அழகையும் ஆளுமைத் திறமையையும் நாடவேண்டும். அழகு பெண்களின் கைகளில் அல்ல.. காசுகளில்தான் தங்கியுள்ளது என்ற நிலை மாறவேண்டும். பணத்தைக் குறிக்கோளாகக் கொண்டிராமல் மக்கள் நலனுக்காகவும் சேவை மனப்பான்மையுடனும் ஆத்மதிருப்தியுடனும் தரமான நற்சான்றிதழ்களுடன் எத்தனை அழகு நிலையங்கள் வலம் வருகின்றன.
விளம்பரங்கள் மூலம் மக்களைக் கவர்ந்திழுக்கும் அழகு சாதனப் பொருட்கள் எத்தனை சதவீதமானவை ஆரோக்கியமானதாக உண்மை அழகினைக் கொடுக்கக் கூடியதாக உள்ளது என்பது கேள்விக்குறி. இரசாயனப் பொருட்களின் கலப்பற்ற இயற்கைப் பழம் மற்றும் மூலிகைகளைக் கொண்டு செய்யப்படும் பேஷியல், கிரீம் வகைகள் அழகுப் பொருட்கள் பரீட்சிக்கப்பட்ட தரநிர்ணய அங்கீகாரத்துடன் பாவிப்பதால் பாதிப்புகள் ஏற்படாதென்பது பொதுவான கருத்து. இளமையும் அழகும் வேண்டும் என்பதற்காக அதே இளமையில் முதுமையையும் காலப் போக்கில் முக விகாரத்தன்மையையும் வாங்கிக் கொள்ளும் இந்த நிலைமை இன்றைய நவீன யுகத்தில் மாறவேண்டும். மாறுமா?
சிதைந்த உருவத்தை சீர்படுத்தலாம். ஆனால், சீரான உருவமைப்பு சீர் கெடாமல் பாத்துக் கொள்வது நம் கையில்தான் உள்ளது.

மல்லிகைக்கு மணமுண்டு! குணமும் உண்டு!

பெண்களுக்கு பிடித்த மலர்களில் மல்லிகைக்குத்தான் முதலிடம். அதுவும் நம் மதுரை மல்லிக்கு உலகெங்கும் மவுசுதான். இந்தியாவின் மலர் ஏற்றுமதியில் மல்லிகை பூ இரண்டாம் இடத்தில் உள்ளது.
மல்லிகையின் நறுமணத்தில் மயங்காதவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். வெள்ளை நிறத்தில் பூத்துக் குலுங்கும் மல்லிகை மலர்கள் நறுமணத்திற்கும் தலையில் சூடுவதற்கும் மட்டுமின்றி மாபெரும் மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது. மல்லிகைப் பூவை பெண்கள் சூடுவதால் அவர்களுக்கு அழகோடு பல மருத்துவப் பயன்களையும் கொடுக்கிறது.
மல்லியில் பலவகையுண்டு. சாதிமல்லி, ஊசிமல்லி, குண்டுமல்லி. இவற்றின் தோற்றம் மாறுபட்டாலும் மருத்துவக் குணங்கள் அனைத்தும் ஒன்றே.
சாதாரணமாக மல்லிகையை மல்லி, புருன்றி,
இருவாட்சி, கொடிமல்லிகை, அனங்கம், மாலதி என்று பல பெயர்களில் அழைக்கின்றர்.

இதன் இலை, பூ, மொட்டு, வேர் அனைத்தும் மருத்துவத் தன்மை வாய்ந்தது.
குடற் புழுக்கள்
குடலில் புழுக்கள் தங்கியிருந்தால் அவை குடல் சுவர்களை அரித்து தின்றுவிடும். இதனால் குடல் புண்ணாகும். இதனால் செரிமானத் தன்மை குறையும்.
இந்த குடற்புழுக்களை அழிப்பதற்கு மல்லிகை மலர்களை நீரில் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அருந்தினால் குடல் புழுக்கள் நீங்கும்.
வாய்ப்புண் வயிற்றுப்புண் நீங்க
வயிற்றில் அஜீரணக் கோளாறால் வாயுக்கள் சீற்றமாகி புண்கள் ஏற்படும். இந்த புண்களின் வேகம் வாய்ப்பகுதியில் தாக்கி வாய்ப்புண் உண்டாகும். இவை நீங்க மல்லிகைப் பூவை தண்ணீரில் கொதிக்க வைத்து அது பாதியான பின்பு வடிகட்டி அந்த நீரை காலை மாலை என இருவேளையும் அருந்தி வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் நீங்கும்.
நரம்புத் தளர்ச்சி நீங்க
சத்தான உணவின்மை, நேரங்கடந்த உணவு, நீண்ட பட்டினி, அதிக வேலைப்பளு காரணமாக சிலருக்கு நரம்புகள் தளர்ச்சியுற்று உடலில் பல பாதிப்புகளை ஏற்படுத்து கின்றது. இவர்கள் மல்லிகை பூவை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கும்.
கண்ணில் சதை வளர்ச்சி
கண்களில் சிலருக்கு சதை வளரும். இதனால் பார்வைக் கோளாறுகள் ஏற்படும். இவர்கள் மல்லிகைப் பூவை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து அருந்தி வந்தால் கண்களில் ஏற்பட்ட சதை வளர்ச்சி குறையும்.
பெண்களுக்கு
மாதவிலக்கின் போது சிலருக்கு அடிவயிற்றில் பயங்கரமான வலி ஏற்படும். மேலும் அதிக உதிரப் போக்கு காரணமாக உருவாகும் சோர்வு நீங்க மல்லிகைப் பூவை நன்கு நீரில் கொதிக்க வைத்து ஆறியபின் அருந்தி வந்தால் மாதவிலக்கின்போது ஏற்படும் பிரச்சனைகள் தீரும்.
பிரசவத்தின் போது ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாமல் போகும். அதனால் சுரந்த பால் மார்பில் கட்டிக்கொண்டு அதிக வலியை உண்டாக்கும். இவர்கள் மல்லிகைப் பூவை அரைத்து மார்பகத்தில் பற்று போட்டால் வலி குறைந்து பால் சுரப்பது நிற்கும்.
மேலும் சிலருக்கு மார்பகத்தில் நீர் கட்டிகள் தோன்றி வலியை ஏற்படுத்தும். இதற்கும் மல்லிகையை அரைத்து பற்று போட்டால் வலி நீங்கி கட்டி குணமாகும்.
உடல் தேற
மல்லிகைப் பூக்களை தினமும் சாப்பிட்டு வந்தால் உடம்பில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். இதனால் அடிக்கடி ஏற்படும் ஜலதோஷம், மூக்கடைப்பு, இருமல் போன்ற தொல்லைகளிலிருந்து மீளலாம்.
மல்லிகைப் பூக்களை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து தேநீர் போல அருந்தி வந்தால் சிறுநீரக கற்கள் நீங்கும். மேலும் நீர்ச்சுருக்கு, நீர் எரிச்சல் நீங்கும்.
புண்கள் ஆற
மல்லிகை மொட்டுக்களை புண்கள், காயம்பட்ட இடங்கள், கொப்புளங்கள், வீக்கங்கள் போன்றவற்றிற்கு அரைத்து மேல் பூச்சாக பூசினால் உடனே குணமாகும்.
மல்லிகை மொட்டுக்களை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகக் கோளாறுகள், கண் நோய்கள், மஞ்சள் காமாலை, பால்வினை நோய்கள் குணமாகும்.
மல்லிகைப் பூக்களை நிழலில் உலர்த்தி பொடி செய்து தேநீர் போல தயாரித்து தினமும் குடித்து வந்தால் எலும்புருக்கி நோய், நுரையீரல் புற்று நோய்களின் பாதிப்புகள் குறையும் என கண்டறிந்துள்ளனர்.
மல்லிகைப் பூவை நன்றாக கசச்கி நெற்றியின் இரு புறங்களிலும் தடவி வந்தால் தலைவலி உடனே குணமாகும்.
மல்லிகைப் பூக்களைக் கொண்டு எடுக்கப்படும் எண்ணெய் கர்ப்பப் பைக்கு வலுவூட்டி,பிரசவத்தின் போது உண்டாகும் வலியைக் குறைத்து சுகப் பிரசவத்திற்கு உதவுகிறது.
மேலும் மன அழுத்தம், ஆண்மையின்மை, அஜீரணம், குறைந்த செரிமான சக்தி போன்றவற்றை குணமாக்கும்.
பெண்களின் கருப்பையில் உண்டாகும் புண்கள் கட்டிகள் நீங்குவதற்கு மல்லிகை எண்ணெயைப் பயன்படுத்தலாம். நாள்பட்ட தழும்புகள், அரிப்புகள் குணமாகும்.
மல்லிகை கஷாயத்தை அருந்தி வந்தால் கண் வீக்கம், தொண்டை கரகரப்பு, சரும நோய்கள் ஆகியன குறையும்.
மல்லிகைப் பூவிலிருந்து நல்ல மணமுள்ள வாசனை திரவியம் தயாரிக்கின்றனர். இது உடலுக்கும், மனதிற்கும் புத்துணர்வைத் தரும்.
மல்லிகையின் வேரை காயவைத்து பொடி செய்து அதனுடன் வசம்புத்தூளைச் சேர்த்து எலுமிச்சம் பழச்சாறு விட்டு தேய்த்துக் குளித்தால் தோல் நோய்கள் நீங்கும்.

அன்பு மனைவியின் அழகிய அணுகு முறைகள்


"என்னங்க! கேட்டீங்களா? உங்க அம்மா பேசிய பேச்சை! உங்கம்மா பண்ணுற வேலையைக் கண்டும் காணாமல் இருக்கின்றீர்களே! இது அநியாயம் இல்லையா?'' என்று வீட்டுக்குள் வந்ததும் வராததுமாய் கணவனிடம் மனைவிமார்கள் எள்ளும் கொள்ளுமாக வெடிக்கும் பழக்கம் இன்றும் பல வீடுகளில் நடந்தேறி வருகின்றது.
அந்தக் கணவர் அலுவலகத்தில் பணியாற்றி விட்டு, மேலதிகாரியின் ஏச்சுக்கும், பேச்சுக்கும் ஆளாகி விட்டு அசதியாகவும், மனச் சுமையாகவும் திரும்பும் ஓர் அதிகாரியாக இருப்பார்.
சரியாகப் படிக்காத மாணவர்களிடம் காலையிலிருந்து மாலை வரை மாரடித்து விட்டு மனக் கஷ்டத்துடன் திரும்பும் ஆசிரியராகக் கூட அவர் இருப்பார். அல்லது ஊரில் நடக்கும் ஃபித்னா, ஃபஸாதுகளைப் பற்றி சங்கடப்பட்டுக் கொண்டே திரும்பும் பொது வாழ்வில் ஈடுபட்டுள்ள ஒருவராக இருப்பார்.
அல்லது இரவெல்லாம் கண் விழித்து காரோட்டி விட்டு வீடு திரும்பும் ஒரு டிரைவராகக் கூட அவர் இருப்பார்.
இப்படிப்பட்டவர்கள் மன அமைதியையும் நிம்மதியையும் தங்கள் மனைவியரிடம் நாடியே வீடு திரும்புவார்கள். ஆனால் இங்கோ அவர் வந்ததும் எரிமலையை எதிர்நோக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்பட்டு நிம்மதியின்றி தவிப்பார்.
அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது:
அபூ தல்ஹாவின் மகன் நோயுற்றிருந்தார். ஒரு நாள் அபூ தல்ஹா ரளியல்லாஹு அன்ஹு வேளியே சென்றிருந்த போது குழந்தை இறந்து விட்டது. இதைக் கண்ட அபூ தல்ஹா ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் மனைவி, உடனே கொஞ்சம் உணவைத் தயாரித்தார். பிறகு மய்யித்தை வீட்டின் மூலையில் வைத்தார்.
வெளியே சென்றிருந்த அபூ தல்ஹா ரளியல்லாஹு அன்ஹு வீடு திரும்பியதும், மகன் எவ்வாறு இருக்கின்றான்? என்று விசாரித்தார். அதற்கு அவரது மனைவி, "அமைதியாகி விட்டான். நிம்மதி பெற்று விட்டிருப்பான் என்பதே என் எதிர்பார்ப்பு'' என்று பதிலளித்தார். அபூ தல்ஹா ரளியல்லாஹு அன்ஹு தம் மனைவி கூறியது உண்மை தான் என்றெண்ணி (நிம்மதியுடன்) தம் மனைவியோடு இரவைக் கழித்தார். பொழுது விடிந்து குளித்து விட்டு வெளியே செல்ல நாடிய போது மகன் இறந்து விட்டதை மனைவி கூறினார்.
அபூ தல்ஹா ரளியல்லாஹு அன்ஹு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு தொழுது விட்டுத் தம் வீட்டில் நடந்த சம்பவத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கூறினார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்"இந்த இரவு நடந்தவற்றில் அல்லாஹ் உங்கள் இருவருக்கும் அருள் செய்யக் கூடும்'' என்று கூறினார்கள்.
"அந்த இருவருக்கும் ஒன்பது குழந்தைகள் இருப்பதை நான் பார்த்தேன். அவர்கள் அனைவரும் குர்ஆனை ஓதுபவர்களாக இருந்தனர் என்று மதீனாவைச் சேர்ந்த அன்சாரிகளில் ஒருவர் கூறினார்'' என்று சுஃப்யான் கூறுகின்றார். (நூல்: புகாரி 1301)
இதே ஹதீஸ் முஸ்லிமில் பின்வருமாறு இடம் பெற்றுள்ளது.
உம்மு சுலைம் மூலமாக அபூ தல்ஹாவுக்குப் பிறந்த குழந்தை இறந்து விடுகின்றது. உடனே உம்மு சுலைம் தம் குடும்பத்தாரை நோக்கி, அவரது மகனின் (இறப்புச்) செய்தியை நான் அவரிடம் தெரிவிக்கும் வரை நீங்கள் தெரிவிக்காதீர்கள் என்று சொன்னார். அவர் வந்ததும் இரவு உணவை வழங்கினார். அவர் சாப்பிட்டு முடித்து நீர் பருகவும் துவங்கினார்.
பிறகு உம்மு சுலைம் இதற்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அபூ தல்ஹாவிடம் காட்சியளித்தார். அவர் நன்றாக சாப்பிட்டு விட்டு இல்லறத்தில் ஈடுபட்டதும், 
"அபூ தல்ஹாவே! ஒரு கூட்டத்தார் ஒரு பொருளை ஒரு வீட்டாரிடம் இரவலாகக் கொடுக்கின்றனர். பின்னர் தாங்கள் இரவல் கொடுத்த பொருளைத் திருப்பிக் கேட்கும் போது, அவ்வீட்டார் கொடுக்காமல் இருப்பது முறையாகுமா?'என்று கேட்கின்றார். அதற்கு அபூ தல்ஹா ரளியல்லாஹு அன்ஹு, "கூடாது'' என்று பதிலளித்தார். "(அது போலத் தான்) உங்கள் மகனின் நிலையைக் கருதிக் கொள்ளுங்கள்'' என்று சொல்கின்றார்.
அதற்கு அபூ தல்ஹா ரளியல்லாஹு அன்ஹு, "என்னை நீ அசுத்தமடைய விட்டு விட்டு இப்போது என்னுடைய மகனைப் பற்றி அறிவிக்கின்றாயே?'' என்று கோபப்படுகின்றார். பிறகு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்று நடந்ததைத் தெரிவிக்கின்றார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "சென்று விட்ட அந்த இரவில் அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக'' என்று துஆச் செய்தார்கள். அது போல் அவர்களுக்குக் குழந்தை பிறக்கின்றது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அந்தச் செய்து எடுத்துச் சொல்லப்படுகின்றது. அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பேரீச்சம்பழத்தை மென்று கொடுத்து அப்துல்லாஹ் என்று பெயர் வைத்தார்கள். (அறிவிப்பவர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 4496)
பொதுவாக பிள்ளைகளைப் பறி கொடுத்த பெண்கள் தங்களைக் கட்டுப்படுத்துவது மிகவும் அரிது! அதனால் அழுது தீர்ப்பதோடு அல்லாஹ்வுக்கு எதிரான வார்த்தைகளைக் கூட அள்ளி வீசுவார்கள். ஆனால் இங்கு உம்மு சுலைம் ரளியல்லாஹு அன்ஹா தமது கணவரிடம், பொய்யைத் தவிர்ப்பதற்காக,"அமைதியடைந்து விட்டான், நிம்மதியடைந்து விட்டான் என்று கருதுகின்றேன்'' என்பது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றார்கள். மேலும் இரவல் பற்றிய பீடிகையைப் போட்டு நேரமறிந்து, மகன் இறந்த செய்தியை எவ்வளவு பக்குவமாக எடுத்து வைக்கின்றார்கள் என்று நாம் பார்க்க முடிகின்றது. இது போன்ற ஒரு பக்குவத்தையும் அணுகுமுறையையும் தமது கணவனிடம் பெண்கள் மேற்கொள்ள வேண்டும்.
கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் கனிவான ஆறுதல்
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முதன் முதலில் மிகப் பாரமான இறை வஹீயைப் பெற்று விட்டு நடுநடுங்கிக் கொண்டு வந்த நேரத்தில் கதீஜா ரளியல்லாஹு அன்ஹா உதிர்த்த வார்த்தைகள் இஸ்லாமிய வரலாற்றில் அழியாத வைர வரிகள் ஆகும்.
(நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முதன் முதலில் ''வஹீ'' அறிவிக்கப்பட்ட போது) இதயம் படபடத்தவர்களாக - அந்த வசனங்களுடன் (தமது துணைவியார்) குவைலிதின் மகள் கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் வந்து, "என்னைப் போர்த்துங்கள். என்னைப் போர்த்துங்கள்'' என்று கூறினார்கள். கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் போர்த்தினார்கள். (நடுக்கம் தீர்ந்ததும்) கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் நடந்த செய்தியைத் தெரிவித்து விட்டு, தமக்கு ஏதும் நேர்ந்து விடுமோ என்று தாம் உறுதியாக அஞ்சுவதாகவும் கூறினார்கள்.
அப்போது கதீஜா ரளியல்லாஹு அன்ஹா, "அவ்வாறு கூறாதீர்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களை ஒரு போதும் அல்லாஹ் இழிவு படுத்த மாட்டான். நீங்கள் உறவினர்களுடன் இணங்கி இருக்கின்றீர்கள். (சிரமப்படுவோரின்) சுமைகளைத் தாங்கள் சுமந்து கொள்கின்றீர்கள். வறியவர்களுக்காக உழைக்கின்றீர்கள். விருந்தினர்களை உபசரிக்கின்றீர்கள். உண்மையான சோதனைகளில் (ஆட்பட்டோருக்கு) உதவி புரிகின்றீர்கள்'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: புகாரி 3)
உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் உயரிய ஆலோசனை
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் தோழர்களும் உம்ராச் செய்ய வந்த போது தடுத்து நிறுத்தப்படுகின்றார்கள். இதைத் தொடர்ந்து ஹுதைபிய்யா உடன்படிக்கை கையெழுத்தாகின்றது. கையெழுத்தான இந்த உடன்படிக்கையின் ஷரத்துக்கள் முஸ்லிம்களுக்குப் பாதிப்பைத் தரும் அம்சங்களாக இருந்தன.
இந்த நேரத்தில் நபித்தோழர்கள் சோகத்தில் மூழ்கிப் போயிருந்தனர். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "எழுந்திருங்கள்! அறுத்துப் பலியிடுங்கள்! தலைகளை மழித்துக் கொள்ளுங்கள்!'' என்று கட்டளையிடுகின்றார்கள். ஆனால் ஒருவரும் எழுந்திருக்கவில்லை. கட்டளைக்கு மாறு செய்ய வேண்டும் என்பது நபித்தோழர்களின் நோக்கமல்ல! ஒப்பந்தத்தில் இருக்கும் பாதகமான அம்சங்களை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்பது தான் அவர்களின் எதிர்பார்ப்புகள்! அதனால் தான் அசையாமல் உட்கார்ந்திருந்தார்கள்.
அப்போது உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா, யோசனை வழங்குகின்றார்கள்.
"அல்லாஹ்வின் தூதரே! பலிப் பிராணியை அறுத்து விட்டு, தலைமுடி களைந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றீர்களா? புறப்படுங்கள். நீங்கள் குர்பானி ஒட்டகங்களை அறுத்து விட்டு உங்கள் நாவிதரை அழைத்து. அவர் உங்கள் முடியைக் களையும் வரை அவர்களில் எவருடனும் ஒரு வார்த்தையும் பேசாதீர்கள்'' என்று உம்மு ஸலமா அவர்கள் கூறினார்கள்.
உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் புறப்பட்டு ஒட்டகங்களைக் குர்பானி கொடுத்து விட்டு, தம் நாவிதரை அழைத்துத் தலைமுடியைக் களைந்து கொண்டார்கள். அதுவரை அவர்கள் எவரிடமும் பேசவில்லை.
இவற்றைக் கண்டவுடன் மற்ற நபித்தோழர்களும் எழுந்து சென்று பலிப் பிராணிகளை அறுத்து. ஒருவர் மற்றவரின் தலை முடியைக் களையத் துவங்கினார்கள். ஒருவர் மற்றவரை நெரிசலால் சாகடித்து விடுவார்களோ எனும் அளவுக்குப் போட்டி போட்டுக் கொண்டு (பலிப் பிராணிகளை அறுக்கவும் முடி களையவும்) சென்றனர். (அறிவிப்பவர்: உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 2732)
இந்த நெருக்கடியான கட்டத்தில் உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் புத்திக் கூர்மை மிக்க யோசனை உண்மையில் சாதாரணமான ஒரு பிரச்சனை அல்ல! போர் தவிர்க்கப்பட்டு சமாதானம் உருவாவதற்கு அடிப்படையாக அமைந்தது.
மனைவிமார்களின் அணுகுமுறை உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் அணுகுமுறை போன்று அறிவு ரீதியானதாகவும், கணவன் ஈடுபட்டிருக்கும் துறைக்கு உகந்ததாகவும், அவர் மாட்டியிருக்கும் சிக்கலைத் தீர்ப்பதாகவும் அமைந்திருக்க வேண்டும். கணவன் சந்திக்கும் பிரச்சனைகள் அரசியல் பிரச்சனையாகவும் இருக்கலாம். சதாரணமான வீட்டுப் பிரச்சனையாகவும் இருக்கலாம்.
ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் (விருந்தாளியாக) வந்தார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (அவருக்கு உணவளிப்பதற்காக) தமது மனைவிமார்களிடம் சொல்லியனுப்பினார்கள். அப்போது அவர்கள், "எங்களிடம் தண்ணீரைத் தவிர வேறெதுவும் இல்லை'' என்று பதிலளித்தனர்..,ml
ஆகவே அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "இவரை சேர்த்துக் கொள்பவர் யார்?'' அல்லது "இவருக்கு விருந்தளிப்பவர் யார்?'' என்று கேட்டார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், "நான் (விருந்தளிக்கின்றேன்)'' என்று கூறி அவரை அழைத்துக் கொண்டு தமது மனைவியிடம் சென்றார்.
"அல்லாஹ்வின் தூதருடைய விருந்தாளியைக் கண்ணியப்படுத்து'' என்று (தம் மனைவியிடம்) கூறினார். அதற்கு அவருடைய மனைவி"நம்மிடம் குழந்தைகளின் உணவைத் தவிர வேறெதுவும் இல்லை'' என்று கூறினார். அதற்கு அந்த அன்சாரித் தோழர், "உன் உணவைத் தயாராக எடுத்து வைத்து விட்டு விளக்கை ஏற்றி விடு. உன் குழந்தைகள் உணவு உண்ண விரும்பினால் அவர்களைத் தூங்கச் செய்து விடு'' என்று கூறினார்.
அவ்வாறே அவருடைய மனைவியும் உணவைத் தயாராக வைத்து, விளக்கை ஏற்றி விட்டுத் தம் குழந்தைகளைத் தூங்கச் செய்து விட்டார். பிறகு விளக்கைச் சரி செய்வது போல் நின்று விளக்கை அணைத்து விட்டார்.
பிறகு (இருக்கும் உணவை விருந்தாளியை உண்ணச் செய்து விட்டு) அவரும் அவரது மனைவியும் உண்பது போல் அந்த மனிதருக்கு (பாவனை) காட்டலானார்கள். பிறகு இருவரும் (உணவு உண்ணாமல்) வயிறு ஒட்டியவர்களாக இரவைக் கழித்தனர்.
காலையானதும் அந்த அன்சாரித் தோழர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்றார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "நீங்கள் இருவரும் செய்ததைக் கண்டு அல்லாஹ் இன்றிரவு சிரித்துக் கொண்டான்'' அல்லது "வியப்படைந்தான்'' என்று கூறினார்கள்.
அப்போது அல்லாஹ், "தமக்கு வறுமை இருந்த போதும் தம்மை விட (பிறருக்கு) முன்னுரிமை அளிக்கின்றனர். தன்னிடமுள்ள கஞ்சத்தனத்திலிருந்து காக்கப்படுவோரே வெற்றி பெற்றோர்'' எனும் (59:9) வசனத்தை அருளினான். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 3798)
இது போன்று எல்லாப் பிரச்சனைகளுக்கும் மனைவியரின் அணுகுமுறைகள் மேற்கண்ட ஹதீஸின் அடிப்படையில் அமைந்திருக்குமானால் இம்மையிலும் மறுமையிலும் மாபெரும் வெற்றி கிடைப்பதற்கு இது காரணமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.