நோன்பு தரும் பாடம்

“ஈமான் கொண்டவர்களே! உங்களக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதியாக்கப்பட்டிருந்தது போல் உங்கள்மீது நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் நீங்கள் துாய்மையுடையோகராகலாம்” அல்குர்ஆன் 2:183
   
மதங்கள் என்றால்,மனிதனைக் காடுகளிலும், வனாந்தரங்களிலும், குகைகளிலும், மடாலயங்களிலும், சர்ச்சுகளிலும் ஒழுக்க உயர்வைப் பெறுவதற்காக, தவ வலிமையை அடைவதற்காக அலைய விடுவதுதான்” என்ற தவறான நம்பிக்கையை முதலும் கடைசியுமாக இஸ்லாம் தான் தகர்த்தெறிந்தது.


  காடுகளிலும், குகைகளிலும், மடாயலயங்களிலும் அமர்ந்து பசித்திருப்பது, விழித்திருப்பது, உணர்வுகளை அடக்குவது போன்ற தவங்களை தனித்த இடங்களில் செய்வதைவிட மக்கள் மத்தியில் அன்றாடப் பிரச்சினைகளுக்கிடையில் செய்து காட்டுவதுதான் உண்மையான, வல்லமையான தவம் என்பதை எவரும் மறுக்க முடியாது. ஏனெனில் சோற்றுக்கே வழியில்லாமல் ஒருவன் எளிமையாக இருக்கிறேன் என்று கூறுவதைவிட எல்லா வசதியும் படைத்த ஒருவன் எளிமையாக இருப்பதுதான் உண்மையான எளிமை என்பதில் ஐயமில்லை.

   
அதே சமயத்தில் இஸ்லாம் மனிதனை காலம் முழுவதும் பட்டினி கிடக்கவேண்டுமென்றோ திருமணத்தை வெறுத்து துறவறத்தை ஏற்று கொள்ளவேண்டுமென்றோ, பாசத்திற்கும், அன்புக்கும் விடைகொடுக்க வேண்டுமென்றோ  சொல்லவில்லை. மாறாக நடுநிலையான ஒரு வாழ்க்கையை கடைபிடிக்கச் சொல்கிறது. இறைவன் தன் திருமறையில் முஸ்லிம் சமுதாயத்தை “உம்மதுன்வஸத்” நடுநிலை சமுதாயம் என்றே குறிப்பிடுகின்றான்.

  
இறைவன் நம்மீது விதித்திருக்கின்ற நோன்பும் இஸ்லாத்தின் தனிப்பெரும் அம்சமாக திகழ்கிறது். ஏனெனில் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அளவுக்கு உணவு உண்ணுவதை தடுத்திருப்பது போல் ஒரேயடியாக பட்டினி கிடப்பதையும் கண்டித்துள்ளார்கள்.


மேலும் நோன்பு என்பது பட்டினி கிடந்து உண்ணாமல், பருகாமல் காலையிலிருந்து மாலை வரை இருப்பது மட்டுமல்ல.  மாறாக இறைவனுக்காக நாம் ஆற்றவேண்டிய பல்வேறு தியாகங்களில் அந்த இரண்டும் இடம் பெறுகின்றன. ஏனெனில் ஹலாலான மனைவியைப் பெற்றிருந்தும் அவளை அணுகாதிருப்பது, ஒரு பொய் கூறினால் பல கோடி லாபம் கிடைக்கும் என்று தெரிந்திருந்தும் பொய் பேசாதிருப்பது,கோபம் ஆத்திரம் பீறிட்டெழுந்தாலும் அடக்கிக் கொணடு தவறான செயல்களை செய்யாதிருப்பது போன்ற பல ஒழுக்க முறைகளைக் கைவிடும் போது அது நோன்பாக இறைவனால் ஏற்கப்படாது”. எவர் பொய்யான சொற்களையும், அதன் மீது செயல் புரிவதையும் மடத்தனமான செயல் புரிவதையும் விடவில்லையோ அவர் உண்ணாமல் பருகாமல் இருப்பதினால் அல்லாஹ்வுக்கு எந்த தேவையும் இல்லை என்பது நபி மொழி.

   
நோன்பின் நோக்கம் மனிதனை புடம் போட்ட தங்கமாக, உள்ளஉறுதி மிக்கவனாக, இறையச்சமுடையவனாக மாற்றுவதுதான் என்பது தெளிவாகின்றது. இன்னும் சொல்லப் போனால் சத்தியப்பாதையில் ஜிஹாத் செய்வதற்கு அவனைத் தயார் செய்கின்ற ஒரு பயிற்சி என்றுகூட கூறலாம்.

  
ஏனைய வணக்க வழிபாடுகளான தொழுகை, ஜகாத், ஹஜ், ஜிஹாத் முதலியவை பிறருக்கும் தெரிந்திருக்கக் கூடிய வகையில்அமைந்துள்ளன. ஆனால் நோன்பு,நோற்பவனுக்கும் இறைவனுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியமாகும். ஒருவன் யாருக்கும் தெரியாமல் ஒரு வாய் உணவு சாப்பிட்டு விடலாம். தாகம் பொறுக்க முடியாமல் ஒரு மிடறுதண்ணீர் குடித்து விடலாம்.ஒருவரும் கண்டுபிடித்து விட போவதில்லை. இருந்த போதிலும் ஒரு உண்மையான அடியான் அவ்வாறு செய்வதில்லை. ஏனெனில் இறையச்சம் முழுமையாக அவன் உள்ளத்தை ஆட்சி செய்கின்றது.

  
இதைத்தான் ஆரம்பத்தில் நாம் எடுத்து வைத்த இறை வசனம் நமக்கு தெளவாக்குகின்றது மனிதனைப் பக்குவபடுத்துகின்ற பெருநோக்கிக்கிற்காக கடமையாக்கப்பட்ட நோன்புக்கு எந்த காரணங்களையும் கற்பிக்க உரிமை இல்லை. வருடத்தில் பதினொரு மாதங்கள் நன்றாக உணவு உடகொள்கின்ற நாம், ஒரு மாதம் நோன்பு நோற்பதால் உடல் உறுப்புகள் புத்துணர்வும், குடல் சுத்தமும் பெறுகின்றது என்று காரணம் கூறும் சிலர், கேட்க இனிமையாக இருந்தாலும், அல்லாவின் நோக்கம் அதுவன்று. எனவே, தான் இறைவன் கூறியதாக நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். 

  
மனிதனுடைய ஒவ்வொரு செயலும் இறைவனிடத்தில் பல மடங்கு பெருகுகின்றது. ஒரு நன்மை பத்து மடங்கிலிருந்து எழுபது மடங்கு வரை அதிகரிக்கின்றது. ஆனால் நோன்பு இதற்கு விதிவிலக்காகும்.  அது எனக்கே உரியது. நான் விரும்பும் அளவு அதற்கு கூலி கொடுப்பேன்.”                                           (ஆதாரம்: புகாரி)